பிரபல பாலிவுட் நடிகரான இர்பான் கானின் உடல்நிலை குறித்த வதந்திக்கு அவருடைய செய்தித் தொடர்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான், உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
54 வயது இர்பான் கான், 1988 முதல் ஹிந்திப் படங்களில் நடித்து வருகிறார். 2017-ல் இவர் நடித்து வெளியான ஹிந்தி மீடியம் படம் இந்தியாவில் மட்டுமல்லாமல் சீனாவிலும் பெரிய வெற்றி பெற்றது. 2011-ல் பான் சிங் தோமர் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார்.
2018-ல் தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார் இர்பான் கான். லண்டனில் இதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டு வருகிறார். சில நாள்களுக்கு முன்பு இர்பான் கானின் தாய் காலமனார்.
இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் இர்பான் கான், மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நிலை மோசமாக உள்ளதால் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இர்பான் கான் குறித்து வதந்தி ஒன்று பரவியது. இதனால் பாலிவுட் திரையுலகினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் இர்பான் கான் குறித்த வதந்திக்கு அவருடைய செய்தித் தொடர்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இர்பானின் உடல்நிலை குறித்து வதந்தி பரவுவது வேதனையை அளிக்கிறது. இர்பான் மீது அக்கறை செலுத்தி விசாரித்தவர்களுக்கு நன்றி. அதேசமயம் வதந்தி பரப்பி ரசிகர்களைப் பீதியடைய சிலர் முயல்கிறார்கள். இர்பான் மிகவும் மன வலிமை கொண்டவர். நோயுடன் தொடர்ந்து போராடி வருகிறார். எனவே வதந்திகளை நம்பவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம். இர்பானின் உடல்நிலை குறித்த தகவல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். இனியும் அத்தகவல்கள் தொடர்ந்து உங்களுக்குக் கிடைக்கும்.
இர்பான், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவருக்குச் சிகிச்சை அளித்து வருகிறார்கள். விரைவில் அவர் குணமடைவார் என எதிர்பார்க்கிறோம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.