நடிகர் மகேஷ் பாபு அளித்த சவாலை ஏற்று தனது வீட்டில் மரக்கன்று நட்டு, அதன் புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார் நடிகர் விஜய்.
திரையுலகினர் மத்தியில் பசுமையான இந்தியா (கிரீன் இந்தியா) சவால் பிரபலமாகி வருகிறது. ஒரு மரக்கன்றை நட்டுவிட்டு அதன் புகைப்படத்தைச் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு அதேபோல மூன்று பேர் மரக்கன்று நடவேண்டும் என திரையுலகப் பிரபலம் சவால் விட வேண்டும்.
பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, இரு தினங்களுக்கு முன்பு தனது பிறந்த நாளைக் கொண்டாடியபோது மரக்கன்றை நட்டு, அதேபோல செய்யுமாறு நடிகர்கள் விஜய், ஜூனியர் என்.டி.ஆர்., நடிகை ஷ்ருதி ஹாசன் ஆகியோருக்குச் சவால் விடுத்தார்.
மகேஷ் பாபுவின் சவாலை ஏற்றுக்கொண்ட நடிகர் விஜய், தனது வீட்டில் மரக்கன்று நட்டு அதன் புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். விஜய்யின் இந்த நடவடிக்கைக்கும் தன்னுடைய புதிய புகைப்படங்களை வெளியிட்டதற்கும் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்.