கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பி.க்கு திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் கூட்டுப் பிரார்த்தனை செய்துள்ளார்கள்.
பின்னணி பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு எக்மோ மற்றும் வெண்டிலேட்டா் கருவிகளின் துணையுடன் தீவிர சிகிச்சையக்கப்பட்டு வருகிறது. தற்போதைய சூழலில் அவரது உடல்நிலை தொடா்ந்து கவலைக்கிடமாகவே இருந்தாலும், முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள் திருப்தியளிக்கும் வகையில் உள்ளதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.
எஸ்.பி.பி. மகன் எஸ்.பி. சரண், இன்று தகவல் தெரிவித்துள்ளதாவது:
எஸ்.பி.பி. உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை. நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம். என்றாலும் ரசிகர்களின் வேண்டுதல் அவரை மீட்கும். திரையுலகினரின் கூட்டுப் பிரார்த்தனைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். உலகம் முழுக்க பிரார்த்தனை செய்கிறார்கள். நன்றி சொல்ல வார்த்தை இல்லை. தலைவணங்குகிறோம். அப்பாவைக் கடவுள் மீட்டுத் தந்துவிடுவார் என்று கூறினார்.
பாடகர் எஸ்.பி.பி. உடல்நலம் பெற திரையுலகினரும் பொது மக்களும் கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்தார். ரஜினி, இளையராஜா உள்பட திரையுலகினரும் இதுகுறித்து வேண்டுகோள் விடுத்தார்கள்.
இதன்படி, உலகமெங்கிலும் உள்ள ரசிகர்களும் திரையுலகினரும் இன்று மாலை 6 மணிக்கு பாடகர் எஸ்.பி.பி.க்காகக் கூட்டுப் பிரார்த்தனை செய்தார்கள். ரசிகர்கள் பலரும் எஸ்.பி.பி. பாடிய பாடலை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்தார்கள்.