சமீபத்தில் நடைபெற்ற அசுரன் படத்தின் 100-வது நாள் வெற்றி விழாவில் நடிகர் பவன், குருவி படம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைத் தெரிவித்தார். இதுபோன்ற வெற்றி விழாக்கள் அரிதானது. கடைசியாக குருவி படத்தின் 150-வது நாள் வெற்றி விழாவில் கலந்துகொண்டேன். அது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் இது கண்டிப்பாக நடந்துள்ளது என்றார். பவனின் இந்தப் பேச்சுக்குச் சமூகவலைத்தளங்களில் விஜய்யின் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
இந்நிலையில் நடிகர் பவன் தன்னுடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். ஒரு பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது:
நான் அப்படிப் பேசியதற்காக விஜய் சாரிடமும் இயக்குநரிடமும் படத் தயாரிப்பு நிறுவனத்திடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். குருவி படப்பிடிப்பின்போது விஜய் சாரிடமே அவருடைய படங்கள் பற்றி ஒளிவுமறைவு இல்லாமல் பேசியுள்ளேன்.
விஜய் சாரை மனத்தில் வைத்துக்கொண்டு மேடையில் நான் பேசவில்லை. சிலர் இதைப் பெரிதுபடுத்துகிறார்கள். தலைப்புகளைப் பயங்கரமாக வைக்கிறார்கள். இந்தத் தடவை நான் மாட்டிக்கொண்டேன் போலிருக்கிறது. மேடையில் விஜய் சார் பெயரை நான் சொல்லவேயில்லை. உண்மையில் படத்தின் பெயரை நான் சொன்னது தான் தவறாகப் போய்விட்டது. அதை நான் சொல்லியிருக்கக் கூடாது. உண்மையிலேயே நான் விஜய் சாரின் ரசிகன் என்று பேட்டியளித்துள்ளார்.