சாலை விபத்தில் காயமடைந்த நடிகை ஷபனா ஆஸ்மி, தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
மும்பை அருகே சனியன்று நிகழ்ந்த சாலை விபத்தில் மூத்த பாலிவுட் நடிகை ஷபனா ஆஸ்மி பலத்த காயமடைந்தார்.
மும்பை - புனே விரைவுச் சாலையில் சென்று கொண்டிருந்த ஷபனா ஆஸ்மியின் கார், மும்பையிலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள கலாபூரில் சனிக்கிழமை மாலை விபத்துக்கு ஆளானது. கார், டிரக்கில் மோதியதால் ஷபனாவுக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, மஹாராஷ்டிராவின் ரைகட் மாவட்டத்தின் பன்வேல் பகுதியில் உள்ள மருத்துவமனையில் ஷபனா அனுமதிக்கப்பட்டார்.
பிறகு, ஷபனா ஆஸ்மி தற்போது அந்தேரியில் உள்ள கோகிலாபென் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருடைய நிலைமை முன்னேறி வருவதாக மருத்துவர்கள் தகவல் அளித்துள்ளார்கள்.
ஒரு பேட்டியில் ஷபனா ஆஸ்மியின் கணவரும் மூத்தப் பாடலாசிரியருமான ஜாவத் அக்தர் கூறியதாவது: ஷபனா இன்னமும் தீவிர சிகிச்சைப் பிரிவில் தான் உள்ளார். ஆனால் ஸ்கேன் பரிசோதனைகளில் ஒரு பிரச்னையும் இல்லை என்று தெரிய வந்துள்ளது. ஆபத்து எதுவும் இல்லை என்று கூறியுள்ளார். விபத்தின்போது ஜாவத் அக்தரும் காரில் பயணம் செய்தார். எனினும் அவருக்குக் காயம் எதுவும் ஏற்படவில்லை.
விபத்து தொடர்பாக, ஷபனா ஆஸ்மியின் காரை ஓட்டி வந்தவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கார், டிரக்கின் பின்புறத்தில் மீது மோதியதால் டிரக்கின் ஓட்டுநர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.