பாலிவுட்டின் பிரபல நடனக் கலைஞர் சரோஜ் கான் காலமானார். அவருக்கு வயது 71.
உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த சரோஜ் கானுக்குக் கடந்த மாதம் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில வாரங்களாக பலவிதமான உடல்நலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட சரோஜ் கான், இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு 1.30 மணிக்கு உயிரிழந்தார். அவருடைய உடல், மலாத் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டார்கள்.
சிறுவயதில் ஒரு நடிகையாக பாலிவுட்டில் அறிமுகமான சரோஜ் கான், பிறகு 1950களில் நடனக் கலைஞராக மாறினார். நடன இயக்குநர் ஷோகன் லாலிடம் பணியாற்றினார். 1974-ல் வெளியான கீதா மேரா நாம் படத்தில் நடன இயக்குநராக அறிமுகமானார். சாந்தினி, நகினா ஆகிய படங்களில் ஸ்ரீதேவியின் நடனங்களுக்கு வடிவமைத்து பாராட்டுகளைப் பெற்றார்.
1980களின் இறுதிகளில் பாலிவுட்டின் பிரபல நட்சத்திரம் ஆனார். மாதுரி தீட்சித்துடன் பணியாற்றிய பிறகு அதிகப் புகழை அடைந்தார் சரோஜ் கான். இந்தியா முழுக்கப் புகழ்பெற்ற ஏக் தோ தீன் பாடலுக்கு நடன இயக்குநராகப் பணியாற்றியவர் சரோஜ் கான் தான். தர், பாஸிகர், தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே, பர்தேஸ், தால், லகான், மணிகர்னிகா போன்ற ஹிட் படங்களில் பணியாற்றியுள்ளார்.
40 வருடங்களாகக் கிட்டத்தட்ட 2000 பாடல்களுக்கு மேல் நடனம் வடிவமைத்துள்ளார் சரோஜ் கான். தேவ்தாஸ், ஜப் வீ மெட், ஸ்ரீரங்கம் (தமிழ்) ஆகிய படங்களுக்காக தேசிய விருதுகளைப் பெற்றார். சில படங்களுக்குத் திரைக்கதை அமைத்துள்ள சரோஜ் கான், நடன நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணியாற்றியுள்ளார்.