இன்ஸ்டகிராம் தளத்தில் சுசாந்த் சிங்கின் மரணம் தொடர்பாகக் கடைசியாகப் பதிவு எழுதியுள்ளார் நடன இயக்குநர் சரோஜ் கான்.
பாலிவுட்டின் சிறந்த நடனக் கலைஞர்களில் ஒருவரான சரோஜ் கான் இன்று காலமானார். அவருக்கு வயது 71.
சிறுவயதில் ஒரு நடிகையாக பாலிவுட்டில் அறிமுகமான சரோஜ் கான், பிறகு 1950களில் நடனக் கலைஞராக மாறினார். நடன இயக்குநர் ஷோகன் லாலிடம் பணியாற்றினார். 1974-ல் வெளியான கீதா மேரா நாம் படத்தில் நடன இயக்குநராக அறிமுகமானார். சாந்தினி, நகினா ஆகிய படங்களில் ஸ்ரீதேவியின் நடனங்களுக்கு வடிவமைத்து பாராட்டுகளைப் பெற்றார்.
1980களின் இறுதிகளில் பாலிவுட்டின் பிரபல நட்சத்திரம் ஆனார். மாதுரி தீட்சித்துடன் பணியாற்றிய பிறகு அதிகப் புகழை அடைந்தார் சரோஜ் கான். இந்தியா முழுக்கப் புகழ்பெற்ற ஏக் தோ தீன் பாடலுக்கு நடன இயக்குநராகப் பணியாற்றியவர் சரோஜ் கான் தான். தர், பாஸிகர், தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே, பர்தேஸ், தால், லகான், மணிகர்னிகா போன்ற ஹிட் படங்களில் பணியாற்றியுள்ளார்.
40 வருடங்களாகக் கிட்டத்தட்ட 2000 பாடல்களுக்கு மேல் நடனம் வடிவமைத்துள்ளார் சரோஜ் கான். தேவ்தாஸ், ஜப் வீ மெட், ஸ்ரீரங்கம் (தமிழ்) ஆகிய படங்களுக்காக தேசிய விருதுகளைப் பெற்றார். சில படங்களுக்குத் திரைக்கதை அமைத்துள்ள சரோஜ் கான், நடன நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் சரோஜ் கான், இன்ஸ்டகிராம் தளத்தில் சசாந்த் சிங்கின் மறைவையொட்டி பதிவொன்றை எழுதியுள்ளார். அதுவே அவர் எழுதிய கடைசிப் பதிவு. அதில் அவர் கூறியதாவது:
சுசாந்துடன் நான் பணியாற்றியதில்லை. ஆனால் பலமுறை சந்தித்துள்ளோம். உன் வாழ்க்கைக்கு என்ன ஆனது? இதுபோன்ற கடுமையான நடவடிக்கையை எடுத்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளேன். ஒரு வயதானவரிடம் உன் பிரச்னையை விவாதித்திருந்தால் அது உதவியாக இருந்திருக்கும். நாங்களும் உன்னைப் பார்ப்பதில் மகிழ்ச்சியடைந்திருப்போம். இந்தச் சூழலை உன் தந்தையும் சகோதரிகளும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. உன் படங்களை நான் விரும்பிப் பார்த்துள்ளேன் என்று எழுதியுள்ளார்.
கிரிக்கெட் வீரா் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோனி வேடத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான இளம் பாலிவுட் நடிகா் சுசாந்த் சிங் ராஜ்புத் (34) மும்பையில் உள்ள அவருடைய வீட்டில் ஜூன் 14 அன்று தற்கொலை செய்துகொண்டாா்.