கரோனா நிவாரண நிதிக்காக 1995-ல் எடுக்கப்பட்ட தன்னுடைய நிர்வாணப் புகைப்படத்தை ஏலம் விடுகிறார் பிரபல நடிகை ஜெனிபர் அனிஸ்டன்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 3 லட்சத்து 87 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்து விட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 2 லட்சத்து 16 ஆயிரம் பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
51 வயது நடிகை ஜெனிபர் அனிஸ்டன், பிரெண்ட்ஸ் (1994–2004) தொடரில் நடித்ததன் மூலம் புகழை அடைந்தவர். 2000-ம் ஆண்டுக்குப் பிறகு இவர் நடித்த பல படங்கள் ஹிட் ஆகி இவருக்கு மேலும் புகழைச் சேர்த்தன. உலகின் மிக அழகான பெண்களின் பட்டியலில் பலமுறை இவர் இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி செய்ய முன்வந்துள்ளார் அனிஸ்டன். 1995-ல், அனிஸ்டனுக்கு 26 வயது இருந்தபோது அவரை வைத்து ஒரு நிர்வாணப் புகைப்படத்தை எடுத்தார் புகைப்படக் கலைஞர் மார்க் செலிகர். அந்தப் புகைப்படத்துடன் தான் எடுத்த 25 புகைப்படங்களை கரோனா நிவாரண நிதிக்காக ஏலத்தில் விட முடிவெடுத்துள்ளார் செலிகர். இன்ஸ்டகிராம் தளத்தில் இதுகுறித்த தகவலை விடியோவுடன் வெளியிட்டுள்ளார் அனிஸ்டன்.
ஏலத்தில் கிடைக்கும் தொகை, என்.ஏ.எஃப். கிளினிக்ஸ் அறக்கட்டளைக்கு வழங்கப்படும். கரோனா நோயாளிகளின் மருத்துவ சிகிச்சைக்கும் இலவசப் பரிசோதனைக்கும் அந்த அறக்கட்டளை இந்த நிதியைச் செலவிடும் என்று அனிஸ்டன் கூறியுள்ளார்.