தூய்மைப் பணியாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக நிவாரணத் தொகையைச் செலுத்தியுள்ளார் நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ்.
கரோனா தடுப்புப் பணிகளுக்காக ராகவா லாரன்ஸ் ரூ. 3 கோடி வழங்குவதாக முதலில் அறிவித்தார். கரோனா நிவாரண நிதிக்குப் பிரபல தமிழ் நடிகர்கள் பலரும் இதுவரை நிதியுதவி அளித்துள்ளார்கள். அவர்களில் ராகவா லாரன்ஸ் தான் அதிகபட்ச தொகையை அளித்துள்ளார் என்று அறியப்படுகிறது. தற்போதைய நிலைமையில் எவ்வளவு கொடுத்தாலும் பத்தாது என்பதால் மேலும் நிதியுதவி அளிக்க முடிவு செய்தார்.
ரூ. 3 கோடி நிதியுதவி அளிப்பதாக அறிவித்தபிறகு மேலும் சில கோரிக்கைகள் வந்துள்ளன. சண்டைக் கலைஞர்கள், உதவி இயக்குநர்கள் எனப் பல தரப்பினரும் உதவி கோரியுள்ளார்கள். மக்களிடமிருந்து கடிதங்களும் விடியோக்களும் வந்துள்ளன. இதையெல்லாம் பார்க்கும்போது இதயம் உடைந்துபோகிறது என்று லாரன்ஸ் அறிக்கை வெளியிட்டார்.
ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கும் லாரன்ஸ், அப்படத்துக்காகப் பெறும் சம்பளத்திலிருந்து ரூ. 25 லட்சத்தைத் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்குவதாக ஏப்ரல் மாதம் அறிவித்தார். தூய்மைப் பணியாளர்கள் தங்களுடைய அடையாள அட்டை, வங்கிக் கணக்கு ஆகிய விவரங்களை 6382481658 என்கிற எண்ணுக்கு அனுப்பும்படி தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன் அறிவித்தார்.
இந்நிலையில் ராகவா லாரன்ஸ் வாக்குறுதி அளித்தபடி, 3,385 தூய்மைப் பணியாளர்களுக்குத் தலா ரூ. 750 என ரூ. 25,38,750 தொகையை தூய்மைப் பணியாளர்களின் வங்கிக் கணக்குக்கு அனுப்பியுள்ளதாக ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன் தெரிவித்துள்ளார். இதனை ராகவா லாரன்ஸ் ட்வீட் செய்துள்ளார்.