ஜெ. அன்பழகன் மறைவு: நடிகர் ஜெயம் ரவி இரங்கல்

திரைப்படங்கள் மீதான அவருடைய பார்வை பலமுறை என்னை வியப்பில் ஆழ்த்தியது.
ஜெ. அன்பழகன் மறைவு: நடிகர் ஜெயம் ரவி இரங்கல்

திமுக சட்டப்பேரவை உறுப்பினரும், அக்கட்சியின் மாவட்டச் செயலாளா்களில் ஒருவருமான ஜெ. அன்பழகனின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது என நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளாா்.

சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ-வுமான ஜெ.அன்பழகன், கடந்த வாரம் குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தீவிர மூச்சுத் திணறல் மற்றும் கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவருக்கு 80 சதவீத பிராண வாயு, செயற்கை சுவாச (வென்டிலேட்டா்) கருவியின் உதவியுடன் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஜெ.அன்பழகன் (62) நேற்று காலை காலமானார்.

ஜெயம் ரவி நடிப்பில் அமீர் இயக்கிய ஆதிபகவன் படத்தைத் தயாரித்தார் ஜெ. அன்பழகன்.

இதையடுத்து ஜெ. அன்பழகனின் மறைவுக்கு நடிகர் ஜெயம் ரவி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ஜெ. அன்பழகனின் மறைவுச் செய்தியைக் கேட்டு மிகவும் வேதனையடைந்தேன். நம்பிக்கை தரும் அரசியல்வாதி மட்டுமல்லாமல் மனிதம் போற்றும் மிகச்சிறந்த மனிதர். மக்களுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்து வாழ்ந்தவர்.

நான் நடித்த ஆதிபகவன் படத்தை அவர் தயாரித்தபோது அவருடன் பல மணி நேரங்களைச் செலவிட்டுள்ளேன். அந்த நினைவுகள் எப்போதும் நீங்காது. திரைப்படங்கள் மீதான அவருடைய பார்வை பலமுறை என்னை வியப்பில் ஆழ்த்தியது.

கரோனா அச்சுறுத்தல் சூழலில் உடல்நலத்தையும் பொருட்படுத்தாமல் மக்கள் பணிகளில் தொடர்ந்து இயங்கியது அவருடைய மனிதத்தை என்றென்றும் சொல்லும். அவருடைய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com