எனக்கு என் புருஷன் வேண்டும்: பீட்டர் பாலின் முதல் மனைவி கோரிக்கை

நான் ஒரு தமிழ்ப் பெண். கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்...
எனக்கு என் புருஷன் வேண்டும்: பீட்டர் பாலின் முதல் மனைவி கோரிக்கை

வனிதா விஜயகுமார் - பீட்டர் பால் திருமணம் செல்லுபடியாகாது, எனக்கு என் புருஷன் வேண்டும் என்று பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் கூறியுள்ளார். 

1995-ல் விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான வனிதா விஜயகுமார், கடந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அதிகப் புகழை அடைந்தார். 

நடிகர் ஆகாஷை முதலில் திருமணம் செய்த வனிதா, 2007-ல் அவரை விவாகரத்து செய்தார். ஆனந்த் ராஜனை 2007-ல் திருமணம் செய்தார் வனிதா. பிறகு 2012-ல் ஆனந்த் ராஜனையும் வனிதா விவாகரத்து செய்தார். வனிதாவுக்கு விஜய ஸ்ரீஹரி என்கிற மகனும் ஜோவிதா, ஜெய்நிதா என்கிற இரு மகள்களும் உள்ளார்கள். மகன் ஸ்ரீஹரி ஆகாஷுடனும் இரு மகள்கள் வனிதாவுடனும் வசித்து வருகிறார்கள். 

சென்னை போரூரில் உள்ள வனிதாவின் இல்லத்தில் கிறிஸ்துவ முறைப்படி விஜயகுமார் - விஷுவல் எஃபெக்ட்ஸ் இயக்குநர் பீட்டர் பால் ஆகியோரின் திருமணம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இத்திருமணத்தில் நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் மட்டும் கலந்துகொண்டார்கள்.

எனினும், திடீர் திருப்பமாக பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் (41), வடபழனி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். எனக்கும் பீட்டர் பாலுக்கும் திருமணம் ஆகி இரு குழந்தைகள் உள்ளன. என்னிடம் விவாகரத்து பெறாமல் மற்றொரு திருமணம் செய்துள்ளார் என்று புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. திருமணத்துக்குச் சில நாள்களுக்கு முன்பே அவர் இந்தப் புகாரை அளித்துள்ளார். 

இந்நிலையில் எலிசபெத் ஹெலன், யூடியூப் தளத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

ட்விட்டரில் எனக்கு ஆதரவு நடித்த நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு நன்றி. அவர் மட்டுமல்லாமல் நிறைய பேர் இதைக் கேட்கவேண்டும்.

இந்தத் திருமணம் குறித்து காவல் நிலையத்தில் 19-ம் தேதியே புகார் அளித்துவிட்டேன். 

விவாகரத்து வாங்கும்வரை திருமணம் செய்யமாட்டேன். 27 அன்று கேக் மட்டும் வெட்டிக்கொள்கிறேன் என்று காவல் நிலையத்தில் எனது கணவர் சொன்னார். ஆனால் கேக் எல்லாம் வெட்டக்கூடாது என்று காவல் நிலையத்தில் அவருக்குச் சொன்னார்கள். பிறகு திருமணத்தன்று படப்பிடிப்புக்காக கேக் வெட்டியதாகச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் ஃபிளாட்டில் திருமணத்துக்காக அனைவரையும் அழைத்துள்ளார்கள். திருமண நாளன்று சாப்பிடக்கூட இல்லாமல் ஒவ்வொரு காவல் நிலையமாகச் சென்றேன்.

நான் ஒரு கோடி கேட்டேன் என்கிறார்கள். நான் எந்தப் பணத்தையும் எதிர்பார்க்கவில்லை. நான் ஒரு கோடி கேட்டேன் என்பதற்கு ஆதாரம் ஏதாவது உள்ளதா?

நான் சட்டரீதியாகத் திருமணம் செய்துள்ளேன். இன்னும் விவாகரத்து செய்யவில்லை. சட்டபூர்வமாகத் திருமணம் செய்தேன் என்று அவர்கள் சொன்னதற்கு ஆதாரம் என்ன உள்ளது?

எங்கும் நியாயம் கிடைக்காததால் தான் ஊடகங்களிடம் எனது தரப்பை விளக்கியுள்ளேன்.

எனக்கு என் புருஷன் வேண்டும். நான் ஒரு தமிழ்ப் பெண். கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன். கணவர் தவறு செய்தால் மனைவி அனுசரித்துதான் போகவேண்டும். அவர் இல்லாமல் நாங்கள் இல்லை. அவருடைய திருமணம் செல்லுபடியாகாது என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com