சிரஞ்சீவி நடிக்கும் படத்திலிருந்து கருத்துவேறுபாடுகள் காரணமாக விலகுவதாக நடிகை த்ரிஷா அறிவித்துள்ளார்.
கொரட்டலா சிவா இயக்கும் ஆச்சார்யா படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் சிரஞ்சீவி. கடந்த அக்டோபர் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. 2006-ல் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய ஸ்டாலின் படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து நடித்தார் த்ரிஷா. அதன்பிறகு இப்போதுதான் மீண்டும் அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு வந்தது. இந்நிலையில் இப்படத்திலிருந்து விலகுவதாக த்ரிஷா அறிவித்துள்ளார்.
ட்விட்டரில் அவர் கூறியதாவது:
முதலில் சொன்னதும் கலந்துரையாடியதும் சிலநேரங்களில் மாறிவிடுகின்றன. கருத்துவேறுபாடுகளால் சிரஞ்சீவி சாரின் படத்திலிருந்து விலகுகிறேன். படக்குழுவினருக்கு வாழ்த்துகள். என்னுடைய அன்பான தெலுங்கு ரசிகர்களே, ஒரு நல்ல படத்தில் மீண்டும் உங்களைச் சந்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.