சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. கரோனா வைரஸால் உலகம் முழுக்க 24,000 மக்கள் இறந்துள்ளார்கள். கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் தொடங்கிய ஊரடங்கு, ஏப்ரல் 14-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். கரோனா வைரஸ் சூழல் தொடா்பாக நாட்டு மக்களுக்கு ஒரே வாரத்தில் 2-ஆவது முறையாக உரையாற்றியபோது இந்த அறிவிப்பை வெளியிட்ட பிரதமா் மோடி, அந்த நோய்த் தொற்றுக்கு எதிரான உறுதியான போரில் இது மிக அவசியமான நடவடிக்கை என்று கூறியுள்ளாா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 700 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா நோய்தொற்று பாதிப்பால் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக ரூ. 4 கோடியை நிவாரண நிதியாக வழங்குகிறார் பிரபல நடிகர் பிரபாஸ். தலா ரூ. 50 லட்சத்தை ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களின் முதல்வர் நிவாரண நிதிக்கும் ரூ. 3 கோடியை பிரதமர் நிவாரண நிதிக்கும் வழங்குவதாக பிரபாஸ் அறிவித்துள்ளார்.
தெலுங்கு நடிகர்களில் பவன் கல்யாண் ரூ. 2 கோடியும் ராம் சரண் ரூ. 70 லட்சமும் சிரஞ்சீவி, மகேஷ் பாபு ஆகியோர் தலா ரூ. 1 கோடியும் கரோனா நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார்கள்.