ராஜஸ்தான் ராயல் ஐபிஎல் அணியின் முன்னாள் இணை உரிமையாளரான ராஜ் குந்த்ராவை 2009-ல் திருமணம் செய்தார் ஷில்பா ஷெட்டி. 2012-ல் இவர்களுக்கு வியான் ராஜ் குந்த்ரா என்கிற மகன் பிறந்தான்.
44 வயது ஷில்பா ஷெட்டி, 2-வதாகப் பிறந்த பெண் குழந்தையை வரவேற்று கடந்த பிப்ரவரி மாதம் பதிவு எழுதினார். வாடகைத் தாய் முறை மூலம் இந்தக் குழந்தை பிறந்தது. பிப்ரவரி 15 அன்று பிறந்த இந்தக் குழந்தைக்கு சமிஷா என்று பெயர் சூட்டப்பட்டது.
வாடகைத் தாய் முறையை முயன்றது ஏன் என்பதற்கு ஷில்பா ஷெட்டி கூறியதாவது:
எனக்குப் பலமுறை கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. வியான் பிறந்த பிறகு இன்னொரு குழந்தை வேண்டும் என விரும்பினேன். கூடப் பிறந்தவர் என இல்லாமல் தனியாளாக வியான் கஷ்டப்படக்கூடாது என எண்ணினேன். பிறகு, ஒரு குழந்தையைத் தத்தெடுக்க விரும்பினேன். அதிலும் எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டது. நான்கு வருடங்கள் காத்திருந்து பலன் கிடைக்காததால் எரிச்சல் அடைந்தேன்.
உடல்நலக் குறைபாட்டால் பலமுறை கருச்சிதைவு ஏற்பட்டது. இதில் பிரச்னை இருப்பது தெரிந்ததால் வாடகைத் தாய் முறை மூலம் 2-வது குழந்தையைப் பெற்றெடுத்தேன். இதிலும் மூன்று முறை தோல்வி ஏற்பட்டது. இதன்பிறகே எங்களுக்கு சமிஷா கிடைத்தாள். ஒருகட்டத்தில் இன்னொரு குழந்தை வேண்டாம் என்றே முடிவெடுத்தேன் என்றார்.