தமிழ்நாட்டில் சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்த நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, தேசிய அளவிலான ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக திரைப்படம் மற்றும் சின்னத்திரைப் படப்பிடிப்புகள் அனைத்தும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன.
தற்போது, திரைப்படம் மற்றும் சின்னத்திரையில் படப்பிடிப்புக்குப் பிந்தைய போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு மட்டும் நிபந்தனையுடன் கூடிய அனுமதியை தமிழக அரசு அளித்துள்ளது. மே 11 முதல் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளைத் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. படத்தொகுப்பு, குரல் பதிவு, கிராபிக்ஸ், நிற கிரேடிங், பின்னணி இசை, ஒலிக்கலவை போன்ற பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சிலநாள்களுக்கு முன்பு, பெப்சி அமைப்பின் தலைவர் செல்வமணி, அமைச்சர் கடம்பூர் ராஜூவைச் சந்தித்தார். பிறகு அவர் கூறியதாவது: சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்த அனுமதி கேட்டுள்ளோம். அரங்குகள், வீடுகள் ஆகியவற்றின் உள்ளே நடைபெறும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி தரவேண்டும். சின்னத்திரை படப்பிடிப்புகள் தொழிற்சாலைகள் போல அரங்குகளின் உள்ளே பணிகள் நடைபெறக்கூடியவை. இதனால் எவ்வித பாதிப்பும் நேராது. இதற்கு ஏதாவது நிபந்தனைகளை அரசு விதித்தாலும் ஏற்றுக்கொள்கிறோம். சின்னத்திரைப் படப்பிடிப்புகள் தொடர்ந்தால் 5000 தொழிலாளர்கள் பணிபுரியக் கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். தொலைக்காட்சிகளும் புத்துயிர் பெறும். புதிய நிகழ்ச்சிகளைப் பார்க்கும் பொதுமக்களுக்கும் உற்சாகம் ஏற்படும் என்றார்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் நாளை முதல் (மே 22) சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்த நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பகுதிகள், பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தக் கூடாது என்றும் ஊரகப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட பகுதிகள் தவிர மற்ற பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தலாம் என்றும் தமிழக அரசு நிபந்தனைகள் விதித்துள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் உள்ளரங்குகளில் மட்டும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் படப்பிடிப்புகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.