கரோனா அச்சுறுத்தல் காரணமாக முகக்கவசம் அணிந்து மனைவி ஷாலினியுடன் நடிகர் அஜித் மருத்துவமனைக்கு வந்த விடியோ சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டுள்ளது.
வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார் அஜித். கரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை மேற்கொள்ளலாம் என தமிழ்த் திரையுலகினருக்குத் தமிழக அரசு அனுமதி தந்துள்ளது. எனினும் ஊழியர்களின் பாதுகாப்பு கருதி வலிமை படம் தொடர்பான பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டாம் எனத் தயாரிப்பாளர் போனி கபூருக்கு அஜித் அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் முகக்கவசம் அணிந்தபடி மருத்துமனைக்குள் நுழையும் விடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. என்ன காரணத்துக்காக அஜித் மருத்துவனைக்குச் சென்றார் பலரும் கேட்டுள்ளார்கள்.
இதுகுறித்து இருவிதமான தகவல்கள் வெளியாகியுள்ளன. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவமனையில் தன் உடலைப் பரிசோதித்துக் கொள்வது அஜித்தின் வழக்கம். அதன்படி நேற்று மனைவியுடன் மருத்துவமனைக்கு வந்து அஜித் பரிசோதனை செய்துகொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றொரு தகவலின்படி, அஜித்தின் தந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரைக் காண அஜித் வந்ததாகவும் கூறப்படுகிறது.