பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் வீட்டின் இரு பணியாளர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதையடுத்து அவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
1998-ல் குச் குச் ஹோதா ஹை படம் மூலமாகத் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார் கரண் ஜோஹர். பல சிறந்த படங்களை இயக்கியதோடு ஏராளமான படங்களையும் தயாரித்துள்ளார். இதுதவிர தொலைக்காட்சித் தொகுப்பாளராகவும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் 48 வயது கரண் ஜோஹரின் இரு பணியாளர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
என்னுடைய இரு பணியாளர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் தென்பட்டவுடன் வீட்டின் ஒரு பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டார்கள். மும்பை மாநகராட்சிக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் எனது வீட்டில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
வீட்டின் இதர உறுப்பினர்களும் மற்ற பணியாளர்களும் எவ்வித அறிகுறிகளும் இன்றி பாதுகாப்பாக உள்ளோம். அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் நெகடிவ் என்கிற முடிவே வந்துள்ளது. எனினும் எங்களைச் சுற்றியுள்ளவர்களின் பாதுகாப்பாக அனைவரும் 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவுள்ளோம். கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஊழியர்களுக்குச் சிறந்த மருத்துவம் வழங்கப்படுகிறது. விரைவில் அவர்கள் குணமடைவார்கள் என எதிர்பார்க்கிறோம் என்று கூறியுள்ளார்.