முரளிதரனாக நடிக்கும் விஜய் சேதுபதி: சமூகவலைத்தளங்களில் எதிர்ப்பைத் தெரிவிக்கும் ரசிகர்கள்

இலங்கை அரசுக்கு ஆதரவளிக்கும் முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்க வேண்டுமா என்று...
முரளிதரனாக நடிக்கும் விஜய் சேதுபதி: சமூகவலைத்தளங்களில் எதிர்ப்பைத் தெரிவிக்கும் ரசிகர்கள்

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூகவலைத்தளங்களில் பலரும் பதிவுகள் எழுதியுள்ளார்கள்.

133 டெஸ்டுகள், 350 ஒருநாள், 12 டி20 ஆட்டங்களில் விளையாடி இலங்கையின் மகத்தான கிரிக்கெட் வீரராக அறியப்பட்டுள்ள முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. இப்படத்துக்கு 800 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை எடுத்துள்ளதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தை எம்.எஸ். ஸ்ரீபதி இயக்குகிறார். இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகளில் படமாக்கப்படவுள்ளது. அடுத்த வருடத் தொடக்கத்தில் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகும். 2021 வருட இறுதியில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழில் உருவாகும் இப்படம் தென்னிந்திய மொழிகளில் மட்டுமில்லாமல் ஹிந்தி, வங்காளம், சிங்களம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்படும்.

நேற்று நடைபெற்ற சிஎஸ்கே - ஹைதராபாத் ஆகிய அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் ஆட்டத்தின்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் முரளிதரனாக விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூகவலைத்தளங்களில் பலரும் பதிவுகள் எழுதியுள்ளார்கள். #ShameOnVijaySethupathi என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. 

இலங்கையின் புதிய பிரதமராக முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்ச, கடந்த ஆகஸ்ட் மாதம் 4-வது முறையாக பதவியேற்றுக் கொண்டாா். அவா் அதிபராக இருந்தபோதுதான் கடந்த 2009-ம் ஆண்டில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டனா். அப்போது அவரது சகோதரரும், தற்போதைய அதிபருமான கோத்தபய ராஜபட்ச பாதுகாப்புத் துறைச் செயலராக இருந்தாா். சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், அதிபர் கோத்தபய ராஜபட்சவை நான் ஆதரிக்கிறேன். அவர் தான் இந்த நாட்டை ஆள்வதற்கான சரியானவர் என்றார் முரளிதரன். 

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நடைபெற்ற உச்சகட்டப் போரின்போது மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும் போர்க்குற்றங்கள் அரங்கேறியதாகவும் பரவலாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இலங்கை பாதுகாப்புப் படையினர் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்று குவித்ததாக ஐ.நா. அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் இலங்கை அரசுக்கு ஆதரவளிக்கும் முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்க வேண்டுமா என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளார்கள். 

மேலும் நேற்று வெளியிடப்பட்ட போஸ்டரில், இலங்கையின் தேசியக் கொடியைக் கொண்ட இலங்கை அணி உடையை அணிந்துள்ளார் விஜய் சேதுபதி. இதுபோன்ற காரணங்களால் 800 படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகவேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்துள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com