கரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த மாா்ச் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டன. இந்த நிலையில், மத்திய அரசு 5-ம் கட்ட தளா்வுகளைக் கடந்த மாதம் அறிவித்தது. அப்போது, சமூக இடைவெளியைப் பின்பற்றி 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளைத் திறக்க அனுமதி வழங்கியது.
இதன் காரணமாக, புதுவையிலும் திரையரங்குகளைத் திறக்க புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அருண் அனுமதி வழங்கினாா்.
இந்நிலையில் புதுச்சேரியில் இன்று முதல் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது இயக்கப்படும் இரு திரையரங்குகளில் ஒருநாளைக்கு மூன்று காட்சிகளைத் திரையிடத் திட்டமிடப்பட்டுள்ளது. வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே பார்வையாளர்கள் திரையரங்கினுள் அனுமதிக்கப்பட்டார்கள். மேலும் அவர்களுக்கு முகக்கவசமும் சானிடைசரும் வழங்கப்பட்டுள்ளன.
நீண்ட நாள்களுக்குப் பிறகு திரையரங்கம் திறக்கப்படுவதால், புதுச்சேரி திருவள்ளூவா் சாலையில் உள்ள ஒரு திரையரங்கம் பொதுமக்களைக் கவரும் வகையில், டிக்கெட் மற்றும் வாகன நிறுத்தக் கட்டணத்தைக் குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ரூ. 120 டிக்கெட் ரூ. 100 ஆகவும், ரூ. 100 டிக்கெட் ரூ. 75 ஆகவும், நான்கு சக்கர வாகனத்துக்கான நிறுத்த (பாா்க்கிங்) கட்டணம் ரூ. 50-ல் இருந்து ரூ. 30 ஆகவும், இரு சக்கர வாகனத்துக்கு ரூ. 20-ல் இருந்து ரூ. 10 ஆகவும் குறைத்துள்ளது.