மக்களால் விரும்பப்படுகிறவர்கள் மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதையும் புரிந்துகொள்வார்கள் என்று 800 பட சர்ச்சையில் நடிகர் விவேக் கூறியுள்ளார்.
133 டெஸ்டுகள், 350 ஒருநாள், 12 டி20 ஆட்டங்களில் விளையாடி இலங்கையின் மகத்தான கிரிக்கெட் வீரராக அறியப்பட்டுள்ள முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. இப்படத்துக்கு 800 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை எடுத்துள்ளதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தை எம்.எஸ். ஸ்ரீபதி இயக்குகிறார். இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகளில் படமாக்கப்படவுள்ளது. அடுத்த வருடத் தொடக்கத்தில் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகும். 2021 வருட இறுதியில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழில் உருவாகும் இப்படம் தென்னிந்திய மொழிகளில் மட்டுமில்லாமல் ஹிந்தி, வங்காளம், சிங்களம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்படும்.
எனினும் இலங்கை அரசுக்கு ஆதரவளிக்கும் முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க வேண்டுமா என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளார்கள். முரளிதரனாக விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூகவலைத்தளங்களில் பலரும் பதிவுகள் எழுதியுள்ளார்கள். #ShameOnVijaySethupathi என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டானது.
இந்நிலையில் குடியரசு முன்னாள் தலைவா் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் 89-வது பிறந்தநாளையொட்டி சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விவேக்கிடம், 800 படத்தில் நடிக்கவுள்ள விஜய் சேதுபதி குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு விவேக் கூறியதாவது:
என்னில் கருத்து கேட்கும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை. மக்களால் விரும்பப்படுகிறவர்கள் மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதையும் புரிந்துகொள்வார்கள் என்றார்.