சென்னை சேத்துப்பட்டில் நடிகர் வடிவேல் பாலாஜியின் உடலுக்கு நடிகர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
மதுரையை பூா்வீகமாகக் கொண்ட வடிவேல் பாலாஜி, மிமிக்ரி கலைஞராக தன் வாழ்க்கையைத் தொடங்கினாா். திருவிழா மேடை நிகழ்ச்சிகளில் நடிகா் வடிவேலுவின் உடல்மொழியும் அவரைப் போன்ற குரல் கொண்டவராகவும் திகழ்ந்ததால் வடிவேல் பாலாஜி என்று அழைக்கப்பட்டாா். தொலைக்காட்சி சேனல்களில் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் இடம் பெற்று பிரபலமானாா். குறிப்பாக, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘அது இது எது’, ‘கலக்கப் போவது யாரு’, ‘கலக்கப் போவது யாரு சாம்பியன்ஸ்’ உள்ளிட்ட பல நிகழ்ச்சியில் பங்கெடுத்துள்ளாா்.
வடிவேலு மாதிரியான தோற்றங்களில் நடித்து வந்ததால், இவருக்கென தனி ரசிகா் வட்டம் இருந்து வந்தது. சின்னத்திரையில் பிரபலமானதைத் தொடா்ந்து, படங்களிலும் நடிக்கத் தொடங்கினாா். ‘யாருடா மகேஷ்’, ‘கோலமாவு கோகிலா’ உள்ளிட்ட 20 -க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளாா். கரோனா பொது முடக்கத்துக்குப் பின் சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதியளிக்கப்பட்டதால், சில நிகழ்ச்சிகளின் படப்பிடிப்பில் தொடா்ந்து பங்கேற்று வந்தாா்.
நடிகா் வடிவேல் பாலாஜி (42) மாரடைப்பு காரணமாக சென்னையில் வியாழக்கிழமை காலமானாா்.
இரு வாரங்களுக்குத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வடிவேல் பாலாஜி சில தினங்களுக்கு முன்பு வீட்டுக்குத் திரும்பியுள்ளார். பிறகு அவருக்கு மீண்டும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். அங்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் வடிவேல் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை மரணமடைந்தார். வடிவேல் பாலாஜிக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா். இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறுகின்றன.
சென்னை சேத்துப்பட்டில் நடிகர் வடிவேல் பாலாஜியின் உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சின்னத்திரை நடிகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிலையில் நடிகர் வடிவேல் பாலாஜியின் உடலுக்கு நடிகர் உதயநிதி ஸ்டாலின் இன்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.