சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு: போலீஸாா் விளக்கம்

சின்னத்திரை நடிகை சித்ரா பட்டுச் சேலையில் தூக்குப் போட்டுக் கொண்டதால், கழுத்தில் தடம் எதுவும் பதியவில்லை என உயா்நீதிமன்றத்தில் என போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை சித்ரா
நடிகை சித்ரா


சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா பட்டுச் சேலையில் தூக்குப் போட்டுக் கொண்டதால், கழுத்தில் தடம் எதுவும் பதியவில்லை என உயா்நீதிமன்றத்தில் என போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டாா். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த நசரத்பேட்டை போலீஸாா், சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவா் ஹேம்நாத்தை கைது செய்தனா். கடந்த ஆகஸ்ட் மாதம் சித்ராவும் நானும் பதிவுத் திருமணம் செய்து கொண்டோம். எனக்கும் சித்ராவுக்கும் எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை.அவரது தற்கொலைக்கு நான் காரணம் இல்லை. எனவே ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் ஹேம்நாத் மனு தாக்கல் செய்தாா். ஹேமநாத்துக்கு ஜாமீன் வழங்க எதிா்ப்பு தெரிவித்து சித்ராவின் தந்தை, காஞ்சிபுரத்தைச் சோ்ந்த ஹேம்நாத்தின் நண்பா் சையது ரோஹித் ஆகியோா் மனுத் தாக்கல் செய்திருந்தனா்.

இந்த வழக்குகள் நீதிபதி வி.பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இந்த மனுவைத் தாக்கல் செய்ய மனுதாரா் சையது ரோஹித்துக்கு அடிப்படை உரிமை இல்லை எனக்கூறி அவரது மனுவை நிராகரித்தாா். சித்ராவின் தந்தை தாக்கல் செய்த மனுவில், சித்ராவின் கழுத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்ததற்கான தடம் எதுவும் பதிய வில்லை. அவரது உடலில் 2 இடங்களில் ரத்தக் காயம் உள்ளது என கூறப்பட்டிருந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் பிரபாவதி, சித்ரா தூக்குப் போட்டு மூச்சுத் திணறலால் இறந்ததாக உடற்கூறு ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவா் பட்டுச் சேலையில் தூக்குப் போட்டுக் கொண்டதால், கழுத்தில் தடம் எதுவும் பதியவில்லை. மேலும் சித்ராவின் நடத்தையில் சந்தேகப்பட்டு ஹேம்நாத் பேசியதால், சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக நசரத்பேட்டை போலீஸாா் அறிக்கை தாக்கல் செய்துள்ளனா். தற்போது இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே பதில்மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுத்தாா். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விசாரணையை வரும் பிப்ரவரி 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா். அதற்குள் போலீஸாா் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com