தன்னைப் பற்றி வெளியான செய்திக்கு இயக்குநர் செல்வராகவன் தனது சுட்டுரைப் பக்கம் வாயிலாக மறுப்பு தெரிவித்துள்ளார்.
இயக்குநர் செல்வராகவன் தற்போது கீர்த்தி சுரேஷுடன் இணைந்து 'சாணிக் காயிதம்' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதனையடுத்து அவர் நடிகர் விஜய்யுடன் இணைந்து 'பீஸ்ட்' படத்தில் நடித்து வருகிறார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது. நடிகர் விஜய் மற்றும் செல்வராகவன் இணைந்து நடிக்கும் காட்சிகளை காண ரசிகர்களிடையே மிகுந்த ஆவல் உருவாகியுள்ளது.
இது மட்டுமல்லாம் அவரது தம்பியும் நடிகருமான தனுஷை வைத்து அவர் இயக்கவுள்ள 'நானே வருவேன்' என்ற படத்தின் அறிவிப்பு வெளியானது. வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவுள்ளார்.
இந்த நிலையில் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் 2 பாகத்தின் அறிவிப்பு கடந்த வருடம் வெளியானது. இந்தப் படம் வருகிற 2024 ஆம் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் ஒரு செய்தி நிறுவனம், ஆயிரத்தில் ஒருவன் 2 படம் கைவிடப்பட்டதாகவும், அந்தப் படத்தின் முன் கட்ட தயாரிப்பு பணிக்காக கோடிக்கணக்கில் செலவிடப்பட்டதாகவும் கூறியிருந்தது.
இதனைப் பகிர்ந்த இயக்குநர் செல்வராகவன், ''எப்பொழுது முன் கட்டப் பணிகள் நடைபெற்றது என சொல்ல முடியுமா ? யார் அந்த தயாரிப்பாளர் ? உங்களுக்கு தகவல் அளித்தவர்களைக் கேளுங்கள்'' என்றார். ஆனால் ஆயிரத்தில் ஒருவன் 2 கைவிடப்பட்டதாக வெளியான தகவலுக்கு அவர் மறுப்பு தெரிவிக்காததால் அது உண்மையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தத் தகவல் ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்துள்ளது.