நடிகர் சிம்புவிற்கும், தயாரிப்பாளர்களிடையே உள்ள பிரச்னை காரணமாக, தயாரிப்பாளர் சங்கத்துக்கும், பெப்சி அமைக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவுகிறது.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு கதாநாயகனாக நடித்த 'அன்பானவன் அடங்காதவன், அசராதவன்' திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியானது. மைக்கேல் ராயப்பன் தயாரித்த இந்த படம் ரசிகர்களை கவரவில்லை. இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் சிம்பு போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என தெரிவித்திருந்தார்.
இதனால் தயாரிப்பாளருக்கும் தரப்புக்கும் சிம்புவிற்கும் பிரச்னை உண்டானது. தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டாம் என தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் முரளி கோரிக்கை விடுத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதனை மீறி 'வெந்து தணிந்தது காடு' படத்துக்கு பெப்சி ஒத்துழைப்பு அளித்ததுள்ளது தயாரிப்பாளர் சங்கத்தை கோபமடையச் செய்துள்ளது.
இதனையடுத்து தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில், 'சங்கத்திற்கும், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி, 6.08.2021 முதல், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது.
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தயாரிப்பாளர்கள் தங்களுக்கு விருப்பமானவர்களை பணியமர்த்திக் கொண்டு திரைப்படத்திற்கு உண்டான படப்பிடிப்பு உட்பட அனைத்து பணிகளையும் மேற்கொள்ளலாம். தொடர்ந்து தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தை அலட்சியப்படுத்தி வரும் தொழிலாளர்கள் சம்மேளனத்துடன் எந்த ஒரு பேச்சுவார்த்தையும் கிடையாது'' ஆகிய முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பெப்சி அமைப்பின் தலைவர் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சம்மேளனத்தின் தலைவராகிய நான் தயாரிப்பாளர்களின் நலனை சீர்குலைக்கும் வகையில் தன்னிச்சையாக செயல்படுவதாக தவறான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்கள். இது முற்றிலும் தவறான தகவலாகும். நடிகர் சிம்பு சம்பந்தப்பட்டு நான்கு தயாரிப்பாளர்களுக்கு பிரச்னை இருப்பதால், சிம்பு நடிக்கும் திரைப்படத்துக்கு ஒத்துழைப்பு தரக்கூடாது ன தயாரிப்பாளர்கள் சங்கம் சம்மேளனத்தைக் கேட்டுக்கொண்டது. சம்மேளனமும் அதன் படி நடந்து வந்தது.
இந்த நிலையில் ஐசரி கணேசன் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் படத்துக்கு நான்கு நாட்கள் வெளியூரில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கோரினார்கள். மேலும் அனைத்து பிரச்னைகளையும் சரி செய்த பிறகே சென்னையில் படப்பிடிப்பு துவங்குவோம் என்ற உத்திரவாதத்தை சம்மேளனத்திற்கு அளித்தனர். அதன்படி தயாரிப்பாளர்கள் சங்கத்திடம், தயாரிப்பாளர் ஐசரி கணேசனின் கோரிக்கையை சம்மேளனம் தெரிவித்தது.
தயாரிப்பாளர் சங்கமும் தயாரிப்பாளர் ஐசரி கணேசனுக்கு படப்பிடிப்பு நடத்திக்கொள்ள அனுமதி தந்த பிறகே, நாங்களும் படப்பிடிப்பில் கலந்துகொண்டோம். இதில் சம்மேளனத்தின் தவறு ஏதும் இல்லை.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமோ அல்லது அதன் தலைமை பொறுப்பில் இருக்கின்ற ஆர்.கே.செல்வமணியாகிய நானோ தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் இடையேயான ஒப்பந்த விதிகளை மீறவில்லை. தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பின்புலத்தில் யாரோ இருந்து வழி நடத்துகிறார்களோ என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது.
நியாயத்திற்கு புறம்பாக பெப்சி அமைப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தினால், தமிழக முதல்வரிடம் முறையிட்டு எந்த பாதிப்பும் இல்லாமல் சுமூகமான தீர்வு கிடைக்கப்பெறுவோம்'' என்று அவரது தரப்பு விளக்கத்தை அளித்தார்.