திரையரங்கு வெளியீட்டுக்காகக் காத்திருக்கும் மாஸ்டர் படம்: விஜய்க்கு சிம்பு பாராட்டு

எனது ரசிகர்கள் மாஸ்டர் படத்தையும் விஜய் அண்ணா ரசிகர்கள் ஈஸ்வரன் படத்தையும் பாருங்கள்...
திரையரங்கு வெளியீட்டுக்காகக் காத்திருக்கும் மாஸ்டர் படம்: விஜய்க்கு சிம்பு பாராட்டு

எனது ரசிகர்கள் மாஸ்டர் படத்தையும் விஜய் அண்ணா ரசிகர்கள் ஈஸ்வரன் படத்தையும் பாருங்கள், திரையரங்குகள் நிறையட்டும் என இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் நடிகர் சிம்பு கூறியுள்ளார்.

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் - ஈஸ்வரன். சிம்பு கதாநாயகனாக நடித்த வந்தா ராஜாவாதான் வருவேன் படம் கடந்த வருடம் வெளியானது. இதையடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஈஸ்வரன் படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இசை - தமன். ஒரு மாதத்துக்குள் ஈஸ்வரன் படப்பிடிப்பை முடித்துத் தந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார் சிம்பு. ஜனவரி 14 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ஈஸ்வரன் படத்தின் வெளியீடு தொடர்பாக நடிகர் சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

இனிய புத்தாண்டைத் தொடங்கியிருக்கும் சினிமா ரசிகர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் எனது அன்பும், வாழ்த்துகளும்!

‘ஈஸ்வரன்’ பொங்கல் தினத்தன்று வெளியாக இருக்கிறது. மிக முக்கியமாக இந்தப் படம் வெகு குறுகிய காலத்தில் தயாரானதே திரையரங்குகளின் மீட்சிக்காகத்தான்.

திரையுலகமே முடங்கிவிட்டது. ஆன்லைன் வெளியீடுகள் ஓரளவு காப்பாற்றி வந்தாலும், திரையரங்குகள் திருவிழாக் கோலம் பூண வேண்டியது அவசியம்.

அதற்காகத்தான் இந்தக் கரோனா காலத்திலும் வெகு பிரயத்தனப்பட்டு உயிரைப் பணயம் வைத்து நடித்து முடித்து, தொழில்நுட்ப வேலைகள், டப்பிங் எல்லாம் செய்யப்பட்டன. இது சாதாரண முயற்சியல்ல.

இதற்காக மெனக்கிட்ட ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

அதே சமயம் அண்ணன் விஜய், படம் முடித்து ஒரு வருடம் ஆகியும் 'மாஸ்டர்' படம் திரையரங்கில் வெளியாக வேண்டும் என உறுதியாக இருந்தார். அது தன்னை உருவாக்கிய, அந்தத் தளத்துக்கு அவர் செய்யும் மரியாதை.

அதில் எனது பங்கும் இருக்க வேண்டுமென்று விரும்பினேன். நாங்கள் திரையரங்குகளால் உருவானவர்கள். மக்கள் எங்களைத் திரையில் பார்த்து மகிழ்ந்து கொண்டாடுவதால் வளர்ந்தவர்கள்.

அவர் நினைத்திருந்தால் மாஸ்டரை ஆன்லைனில் வெளியிட்டிருக்கலாம். ஆனால் திரையரங்குகளுக்கு மீண்டும் விடிவுகாலம் வரவேண்டுமென பொறுத்திருந்து வெளியிடுகிறார்.

திருவிழா நாட்களில் எப்போதும் இரண்டு பெரிய படங்கள் வெளிவரும். கலவையான படங்கள் வரும்போது மக்கள் திரையரங்குக்கு பயமின்றி வரத் தொடங்குவார்கள்.

என் ரசிகர்கள் 'மாஸ்டர்' படம் பாருங்கள், விஜய் அண்ணா ரசிகர்கள் 'ஈஸ்வரன்' பாருங்கள்.

திரையரங்குகள் நிறையட்டும். கரோனா தாண்டி வாழ்க்கையோடு போராடி வெற்றி பெற்று நிற்கும் நாம் நமது மன அழுத்தங்களிலிருந்து வெளிவர வேண்டும். அதற்கு இந்தப் படங்கள் நிச்சயம உதவும். உங்களை மகிழ்விக்கும்.

விநியோகஸ்தர்கள், திரையரங்குகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரும் நல்லபடியாக மீண்டு வரவேண்டும். திரையுலகம் செழிக்க வேண்டும்.

அதற்கான வாசலை மாஸ்டரும் ஈஸ்வரனும் செய்யும் என்று நம்புகிறேன்.

கடைகள், மால்கள் , கடற்கரை என எல்லாமே முழுமையாகத் திறக்கப்பட்டுவிட்டன.

திரையரங்குகள் முழுமையாகத் திறக்கப்பட்டுவிட்டாலொழிய அந்தப் பழைய நிலை வராது.

வசூல் நஷ்டமே ஏற்படும். அரசும் தயைகூர்ந்து 100% இருக்கைகளுக்கு அனுமதி தந்து, பாதுகாப்பு விதிகளை அதிகரித்து, திரையரங்க உரிமையாளர்களையும் சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் காக்க நல்ல உத்தரவை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். தமிழக முதல்வர் விரைந்து தமிழ்ப் புத்தாண்டிற்குள் நூறு சதவீத இருக்கை ஆக்கிரமிப்பு குறித்து உத்தரவிட்டால், மிக்க நன்றியுள்ளவர்களாக இருப்போம் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com