விஜய் நடித்த மாஸ்டர் படத்தை சென்னை வெற்றி திரையரங்கில் பார்த்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் விஜய். இசை - அனிருத். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் போன்றோர் நடித்துள்ளார்கள்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரையரங்குகள் எட்டு மாதங்களாக இயங்கவில்லை. இதனால் மாஸ்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது. படத்தின் முதல் நாள், முதல் காட்சியைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் அதிகாலையிலேயே திரையரங்குகளில் குவிந்தார்கள். மாஸ்டர் படக்குழுவைச் சேர்ந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் ஷாந்தனு, இசையமைப்பாளர் அனிருத், நடிகை மாளவிகா போன்றோர் சென்னை ரோகிணி திரையரங்கில் ரசிகர்களுடன் இணைந்து இன்றைய காலைக் காட்சியைக் கண்டுகளித்தார்கள்.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ், சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கில் மாஸ்டர் படத்தைப் பார்த்துள்ளார். காலைக் காட்சியைப் பார்த்துவிட்டு ட்விட்டரில் கீர்த்தி சுரேஷ் கூறியதாவது:
ஒரு வருடம் காத்திருந்து மீண்டும் திரையரங்குக்குத் திரும்புவது எந்தளவுக்குப் பரவசமானது என்பதை என்னால் விவரிக்க முடியவில்லை. மாஸ்டர் படத்துக்காக வந்திருப்பது இன்னும் சிறப்பானது. இது மாஸ்டர் பொங்கல்டா என்று கூறி புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.