சமூகத்திற்கான சீர்திருத்த படங்களை உருவாக்கும் இயக்குனர்கள், திரை எழுத்தாளர்களைக் கெளரவிக்க வேண்டும்: முதல்வருக்கு இயக்குநர் சேரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலக்கியத் துறையில் சிறந்து விளங்குபவா்களுக்கு இலக்கிய மாமணி விருது வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து இயக்குநர் சேரன் ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது:
திட்டங்கள் சிறப்பு சார்.. எழுத்தாளர்களைக் கெளரவிப்பது பாராட்டுக்குரியது.. அதேபோல திரைத்துறையிலும் மக்களுக்கான, சமூகத்திற்கான சீர்திருத்த படங்களை உருவாக்கும் இயக்குனர்கள் திரை எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்களையும் கருத்தில் கொள்ளுமாறு இந்த பதிவை இடுகிறேன். விழிப்புணர்வு மற்றும் வாழ்வியல் சார்ந்த திரைப்படங்களை உருவாக்கும் கலைஞர்கள் வியாபாரச்சந்தையிலும் புறந்தள்ளப்படுகிறார்கள். படைப்புகளை மக்களிடம் கொண்டு செல்ல முடியாத நிலைதான் இருக்கிறது. வியாபாரம் சாராததுதான் மக்களுக்கான கலை.. அதைக் கவனத்தில் கொண்டு இதைப் பாருங்கள். மாநில விருது, தேசிய விருது பெற்ற இயக்குனர்கள், திரை எழுத்தாளர்கள் நிறைய பேர் வாழ்வியல் பிரச்னைகளில் இருக்கிறார்கள். எல்லாத்துறைகளிலும் சிறந்தவர்களை கவனிக்கும் தாங்கள் இத்துறையின் முன்னோடிகளையும் கெளரவிக்க வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள் என்று கூறியுள்ளார்.