மால்களை விடவும் உள்ளூர் வணிகர்களிடம் பொருள்களை வாங்குவோம் என நடிகர் சோனு சூட் கோரிக்கை விடுத்துள்ளார்.
கரோனா ஊரடங்கால் அவதிப்பட்ட பலருக்கும் உதவிகள் செய்து இந்திய அளவில் புகழ் பெற்றவர் பாலிவுட் நடிகர் சோனு சூட். பஞ்சாப் மாநிலத்தின் மோகா மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஊரடங்கு காலத்தில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் பலரும் தங்களது சொந்த ஊருக்கு சென்று சேர்வதற்கான போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்து தந்தார். புலம்பெயர் தொழிலாளர்கள் சிலரை விமானம் மூலமாகவும் சொந்த ஊருக்கு அனுப்பி வந்தார். இதுபோன்ற உதவிகளினால் திரையுலகினர் மற்றும் ரசிகர்களின் பாராட்டுகளை சோனு சூட் பெற்றார். இந்தியாவில் நிலவும் கரோனா 2-வது அலையிலும் பலருக்கும் உதவி செய்து வருகிறார் சோனு சூட். ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை இறக்குமதி செய்து, பதினாறு மாநிலங்களில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை நிறுவவுள்ளார்.
இந்நிலையில் உள்ளூர் வணிகர்களிடம் பொருள்களை வாங்குவோம் என நடிகர் சோனு சூட் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்காக முட்டை, பிரெட், சிப்ஸ், தினசரி மளிகைப் பொருள்களை சைக்கிளில் எடுத்துச் சென்று பொதுமக்களிடம் விற்று விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக விடியோவையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
மளிகைப் பொருள்களை வாங்க மால்களுக்குப் போக வேண்டியதில்லை. உள்ளூர் வணிகர்களிடம் பொருள்களை வாங்குவோம். சோனு சூட் சூப்பர் மார்க்கெட் உங்களுக்குப் பொருள்களை வழங்குகிறது. இலவசமாக வீட்டுக்குப் பொருள்கள் வந்துசேரும். 10 முட்டைகள் வாங்கினால் ஒரு பிரெட் இலவசம். சிறு வணிகர்களுக்கு ஆதரவைத் தெரிவிப்போம் என்று கூறியுள்ளார்.