எழுத்தாளர் கி.ரா.வின் மறைவுக்குத் தமிழ் நடிகை ப்ரியா பவானி சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் கி.ரா. என அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் (98) வயது மூப்பின் காரணமாக, புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு (மே 17) காலமானாா்.
‘கோமதி’, ‘கண்ணீா்’, ‘கரிசல் கதைகள்’, ‘கி.ரா.பக்கங்கள்’, ‘கிராமியக் கதைகள்’, ‘கொத்தைபருத்தி’, ‘புதுவை வட்டார நாட்டுப்புறக் கதைகள்’, ‘கோபல்ல கிராமம்’, ‘புதுமைப்பித்தன்’, ‘மாமலை ஜீவா’ ஆகியவை இவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை.
இந்நிலையில் எழுத்தாளர் கி.ரா.வின் மறைவுக்குத் தமிழ் நடிகை ப்ரியா பவானி சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுபற்றி ட்விட்டரில் அவர் கூறியதாவது:
கி.ராஜநாரயணன்...
தமிழில் பேசினால் அபராதம் என கிளாஸ் லீடரைப் பெயர் எழுதச் சொல்கிற பள்ளியில் 14 வருடங்களாக ஆங்கிலத்திலேயே சிந்திக்கப் பழக்கப்பட்டோம். அப்படி ஒரு வாழ்க்கைமுறையில் ஒரு தனியார் நூலகரின் பரிந்துரையில் கோபல்ல கிராமம் மூலம் அறிமுகமானவர் தான் கி.ரா. பிறகு 14, 15 வயதில் ‘வயது வந்தவர்களுக்கு மட்டும்’ என்கிற பெயர் நம்மை ஈர்க்க, ஒரு குறுகுறுப்புடன் அதை நூலகரின் அருகில் வைத்த என்னை நினைத்தால் எனக்கே சில சமயம் வெட்கமாக இருக்கும். அதன் வழி கி்.ரா. இன்னும் பரிச்சயமாகிறார். அவருடைய சிறுகதைகள் நான் வாழாத உலகத்தை மனதில் பதிய வைத்தது. எழுத்தாளர்கள் என்றுமே மறைவதில்லை. இப்போதும் என்னைப் புன்னகைக்க வைக்கிறார். நிறைவான வாழ்க்கை என்று எழுதியுள்ளார்.