கரோனா ஊரடங்கால் வேலையின்றித் தவிக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு சிவகார்த்திகேயனும் ஐஸ்வர்யா ராஜேஷும் நிதியுதவி செய்துள்ளார்கள்.
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத காரணத்தால், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள், நிகழ்ச்சிகளை நம்பியுள்ள தொழிலாளா்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளார்கள். இதனால் திரைப்படப் பிரபலங்கள் நிதியுதவி செய்யவேண்டும் என்று பெப்சி அமைப்பின் தலைவர் செல்வமணி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதேபோல கரோனா ஊரடங்கால் பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு முன்னணி நடிகர்கள், நடிகைகள் உதவவேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை சார்பில் வேண்டுகோள் விடுத்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் ரூ. 1 லட்சமும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ரூ. 50 ஆயிரமும் நடிகை லதா ரூ. 25 ஆயிரமும் நடிகர் விக்னேஷ் ரூ. 10 ஆயிரமும் வழங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.