இயக்குநர் ஹரி படப்பிடிப்பிற்காக நாகப்பட்டினம் சென்றுள்ள நடிகர் அருண் விஜய், படப்பிடிப்பிற்கு இடையில், நாகூர் தர்காவிற்கு சென்றுள்ளார்.
இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பழனி, காரைக்குடி, ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.
இந்த வகையில் தற்போது படக்குழுவினருடன் நாகப்பட்டினம் செல்லவிருப்பதாக அருண் விஜய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதனையடுத்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நாகூர் தர்காவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து, ''படப்பிடிப்பின் போது, நாகூர் தர்காவிற்கு சென்றேன், எம்மதமும் சம்மதம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அருண் விஜய்யின் 33வது படமான இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். முதன்முறையாக அருண் விஜய் - இயக்குநர் ஹரி இணைந்துள்ளதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.