சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் நாய் சேகர் படத்தில் பிரியா பவானி ஷங்கர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இம்சை அரசன் 24 ஆம் புலிக்கேசி படத் தயாரிப்பு தரப்புக்கும் நடிகர் வடிவேலுவுக்கும் இருந்த பிரச்னை காரணமாக அவர் நடிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் நடிகர் வடிவேலுவைத் தொடர்ந்து படங்களில் காண முடியாத வருத்தம் ரசிகர்களிடம் எழுந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தில் இந்த விவகாரம் சுமூகமாக தீர்வு காணப்பட்டதன் பேரில், நடிகர் வடிவேலுவுக்கு விதிக்கப்பட்டிருந்தத் தடை நீக்கப்பட்டது. இதனையடுத்து அவர் நடிக்கும் நாய் சேகர் படத்தின் அறிவிப்பு வெளியானது.
இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க, இயக்குநர் சுராஜ் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். சுராஜ் இயக்கத்தல் உருவான தலைநகரம் படத்தில் நாய் சேகர் என்ற வேடத்தில் நடிகர் வடிவேலு நடித்திருந்தார்.
இந்தப் படத்தின் நகைச்சுவைக் காட்சிகள் மிக பிரபலம். நாய் சேகர் என்ற பெயரில் நடிகர் சதிஷ் ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்தப் பெயர் ஏற்கனவே தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பதால் வடிவேலு படத்துக்கு அந்தப் பெயர் கிடைக்குமா என்ற சிக்கல் எழுந்துள்ளது.
இந்த நிலையில் இயக்குநர் சுராஜ், இந்தப் படத்தில் நடிகர் வடிவேலுக்கு ஜோடி இல்லை எனவும், ஆனால் முன்னணி கதாநாயகி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் எனவும் தெரிவித்தார். இந்த நிலையில் நடிகை பிரியா பவானி ஷங்கர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் நடிகை பிரியா பவானி ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், தனது படத்துடன் வடிவேலுவின் படம் இணைக்கப்பட்ட படத்தை பகிர்ந்து, அதிர்ஷ்டசாலி பெண் என்று குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து வடிவேலுவுடன் அவர் இணைந்து நடிக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.