சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது குறித்து நடிகை ஸ்ருஷ்டி தனது சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் என்ற நிகழ்ச்சியை நடிகர் அர்ஜூன் தொகுத்து வழங்கி வருகிறார். தீவு ஒன்றில் 16 போட்டியாளர்கள் காடர்கள் மற்றும் வேடர்கள் என இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டியில் கலந்துகொண்டுள்ளனர்.
இதில் காடர்கள் அணியில் இருந்து இந்திரஜாவும்,வேடர்கள் அணியில் இருந்து ஸ்ருஷ்டியும் எலிமினேஷனுக்கு அனுப்பப்பட்டனர். மேலும் காடர்கள் அணியில் இருந்து காயத்ரியும் எலிமினேஷன் பட்டியலில் இடம் பெற்றார். இவர்கள் மூவருக்கும் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் வெல்லும் இருவரும் நிகழ்ச்சியில் மீண்டும் தொடரலாம் என்று சொல்லப்பட்டது.
முதலில் காயத்ரியும், ஷ்ருஷ்டியும் போட்டியிட்ட நிலையில் காயத்ரி வெற்றி பெற்றதால், ஸ்ருஷ்டி இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். நிகழ்ச்சியில் இறுந்து வெளியேறியது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், நிங்கள் தொலைக்காட்சியில் பார்ப்பது மிகவும் குறைவு தான். இந்தப் போட்டியில் கலந்துகொண்ட ஒவ்வொரு போட்டியாளர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள். இந்த நிகழ்ச்சி மிகக் கடுமையானது. உடலும், மனமும் இணைந்து பங்கேற்பது மிக முக்கியம். தோல்விகள் ஒன்றும் தோல்விகள் அல்ல. அவை நம்மை சிறப்பானவற்றை நோக்கி முன் செலுத்தும்.
நான் உங்களுடன் தொடர்புகொள்ளும் வாய்ப்பை இழந்ததற்கு வருத்தம் கொள்கிறேன். ஒரு பயணத்தின் முடிவு என்பது அடுத்த செயலின் துவக்கம். வருங்காலத்தில் உங்களை மகிழ்விக்க காத்திருக்கிறேன். உங்கள் நேசத்துக்கு நன்றி. அர்ஜூன் சொல்வது போல், வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்று குறிப்பிட்டுள்ளார்.