மறைந்த நடிகர் விவேக் சார்பில் விருது வாங்கிய நடிகர் யோகி பாபுவிற்கு அவரது மகள் நன்றி தெரிவித்துள்ளார்.
நகைச்சுவை காட்சிகளின் வழியே தொடர்ச்சியாக சமூகக் கருத்துக்களை தெரிவித்து வந்தவர் நடிகர் விவேக். சமூகத்தில் நிலவும் மூட நம்பிக்கைகளை தனது படங்களில் மூலம் கடுமையாக எதிர்த்தார். மக்களிடையே அவரது நகைச்சுவை காட்சிகளுக்கு எப்பொழுதும் தனி வரவேற்பு இருந்தது வந்தது.
நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் மாதம் உடல் நலக் குறைவால் காலமானார். இதனையடுத்து அவர் கடைசியாக நடித்த படமாக சுந்தர்.சியின் அரண்மனை 3 படம் அமைந்துவிட்டது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில் நடிகர் விவேக்கிற்கு தாராள பிரபு படத்துக்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.
இதுகுறித்து நடிகர் விவேக்கின் சுட்டுரைப் பக்கத்தில் இருந்து அவரது மகள் எழுதியுள்ள பதிவில், என் தந்தைக்கு சிறந்த நகைச்சுவை நடிகர் விருது வழங்கிய சைமா குழுவினருக்கு நன்றி.
விருதை வாங்கி, வீட்டிற்கு கொண்டுவந்து அளித்த யோகி பாபு அண்ணாவிற்கு நன்றி. தாராள பிரபு படக் குழுவினருக்கும், ரசிகர்களும் நன்றி என்று தெரிவித்துள்ளார். நடிகர் விவேக்கின் சுட்டுரைப் பக்கத்தில் இருந்து அவரது மகள் பதிவிட்டுள்ளது ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.