சென்னை 28 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் படத்தொகுப்பாளராக அறிமுகமானவர் பிரவீன் கே.எல். தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.
குறிப்பாக மாநாடு படத்தில் பிரவீன் கே.எல்-ன் பணி மிகுந்த பாராட்டுகளைப் பெற்றது. டைம் லூப் முறையில் அந்தப் படம் உருவானதால் படத்தில் நடந்த நிகழ்வுகளே மீண்டும் மீண்டும் நடக்கும். நடப்பது மீண்டும் மீண்டும் நடக்கிறது என்பது நமக்கு புரிய வைக்க வேண்டும், அதே நேரத்தில் ரசிகர்களுக்கு சலிப்பும் ஏற்படக் கூடாது. இதனை மிகவும் சரியாக கையாண்டிருந்தார் பிரவீன் கே.எல்.
இதையும் படிக்க | இரட்டை வேடங்களில் தனுஷ் ? 'நானே வருவேன்' பட புதிய போஸ்டர்
ஆரண்ய காண்டம் படத்துக்காக சிறந்த படத்தொகுப்பாளர் என்ற பிரிவில் தேசிய விருதையும் அவர் பெற்றுள்ளார். தற்போது சிம்பு நாயகனாக நடிக்கும் பத்து தல படத்தில் பணிபுரிந்து வருகிறார். கிருஷ்ணா இயக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்த நிலையில் பிரவீன் கே.எல். தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், ஸ்காட்லாந்து நாட்டில் ஒரு சதுர அடி நிலம் வாங்கியதாகவும், அதற்காக அந்நாடு அவருக்கு லார்டு (Lord) என்ற பட்டம் கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பட்டத்தை அவர் தனது வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக்கொள்ளலாம். அவர் வாங்கிய இடத்தில் அவரது பெயரில் ஒரு மரம் நட்டு வளர்க்கப்படுமாம்.