இயக்குநர் ஷங்கர் தற்போது தெலுங்கில் ராம் சரண் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த நிலையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் ரசிகர்களுக்கு எச்சரிக்கைவிடுக்கும் விதமாக பதிவு ஒன்றை எழுதியுள்ளது. அதில், ''இயக்குநர் ஷங்கர் - ராம்சரண் இணையும் படத்தின் தேவைக்காக திறந்த வெளியில் மக்கள் கூட்டத்துடன் படபிடிப்பு நடைபெறவிருக்கிறது.
இதையும் படிக்க | சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' டீசர் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்
இதனால் ரசிகர்கள் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். படப்பிடிப்புத் தளத்தில் அனுமதியின்றி எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் விடியோக்களைப் பதிவிடக் கூடாது. அப்படி பதிவிட்டால் எங்கள் குழு நடவடிக்கை எடுக்கும்.
அதனால் அனைவரும் எங்களுக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நீங்கள் அப்படி ஏதாவது பதிவுகளைப் பார்த்தால் உடனடியாக report@blockxtech.com என்ற மின்னஞ்சல் முகவரியில் புகார் அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இயக்குநர் ஷங்கர் இயக்கும் இந்தப் படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க, ஜெயராம், சுனில், அஞ்சலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தமன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.