ஆலியா பட் நடித்துள்ள கங்குபாய் கத்தியவாடி திரைப்படத்துக்கு எதிரான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்த மும்பை உயர் நீதிமன்றம், திரைப்படம் பிப்ரவரி 25-ம் தேதி வெளியாகும் என உத்தரவிட்டுள்ளது.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ஆலியா பட் நடித்துள்ள திரைப்படம் கங்குபாய் கத்தியவாடி. இந்தப் படத்தின் தலைப்பை மாற்றக் கோரி காங்கிரஸ் எம்எல்ஏ அமின் படேல் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். கத்தியாவாடி சமூகத்தைக் காட்டும்போது கமாத்திபூரா தவறாகக் காண்பிக்கப்படுவதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார். இதுதவிர படத்துக்கு எதிராக பல்வேறு மனுக்களும் மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, காங்கிரஸ் எம்எல்ஏ-வின் மனு உள்பட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும் எவ்விதத் தடையும் இல்லாமல் திரைப்படமானது பிப்ரவரி 25-ம் தேதி வெளியாகும் எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பட விளம்பர நிகழ்ச்சியில் ஆலிய பட் பேசுகையில், "படம் நல்ல படமா, கெட்ட படமா என்பது பொருட்டே இல்லை. படத்தைப் பார்த்த பிறகு ரசிகர்களே இறுதி முடிவை எடுப்பார்கள். அதற்கு முன்போ, பின்போ எது நடந்தாலும், விதியை மாற்ற முடியாது" என்றார்.