மகேஷ் பாபு நடித்து தெலுங்கில் பெரும் வெற்றிபெற்ற 'போக்கிரி' படம் தமிழில் அதே பெயரில் விஜய் நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு வெளியானது. இன்றுடன் இந்தப் படம் வெளியாகி 15 வருடங்கள் ஆகிறது.
நடிகராகவும், நடன இயக்குநராக மட்டுமே தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான பிரபு தேவா, முதன்முறையாக தமிழில் இயக்குகிறார் என்பதே ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு உருவாக காரணமாக அமைந்தது. படத்தில் அதுவரை எல்லா உணர்வுகளையும் அதீதமாக வெளிப்படுத்தி நடித்து வந்த விஜய், முகத்தில் எந்த உணர்வுகளையும் வெளிக்காட்டாமல் நடித்தது ரசிகர்களுக்கு புதுமையாக இருந்தது.
இதையும் படிக்க | வதந்திக்கு புகைப்படம் மூலம் பதிலளித்த தனுஷ் பட நாயகி
படத்தின் துவக்கத்தில் நடிகர் விஜய், ''இந்த பொங்கலுக்கு நமக்கு செம கலெக்சன் மா'' என வசனம் பேசியிருப்பார். அதனை மெய்ப்பிக்கும் விதமாக இந்தப் படம் வசூலில் சாதனை படைத்தது.
விஜய் - அசின் இடையேயான காதல் காட்சிகள், சண்டைகாட்சிகள், வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகள், வித்தியாசமான வில்லனாக பிரகாஷ் ராஜின் நடிப்பு உள்ளிட்ட அம்சங்களால் ரசிகர்கள் படத்தை திரையரங்கில் மீண்டும் மீண்டும் பார்த்தனர்.
குறிப்பாக துவக்கப் பாடலில் விஜய் - பிரபு தேவா இணைந்து நடனமாடி ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர். இப்படி பல சிறப்பம்சங்களால் விஜய் ரசிகர்களுக்கு இந்தப் படம் மறக்க முடியாத படமாக இருந்து வருகிறது.