நடிகர் தனுஷை அவருடைய மனைவியான ஐஸ்வர்யாவுடன் சேர்த்து வைக்கச் சொல்லி தனுஷின் போலி பெற்றோர் ரஜினிகாந்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இயக்குநர் கஸ்தூரிராஜா மற்றும் விஜயலட்சுமியின் மகனான நடிகர் தனுஷ் கடந்த சில நாள்களுக்கு முன் அவருடைய மனைவியான ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை விவகாரத்து செய்வதாக அறிவித்தார்.
இந்த திடீர் பிரிவு தனுஷின் ரசிகர்கள் மற்றும் நலவிரும்பிகளுக்கு பெரிய அதிர்ச்சியை அளித்தது.
இதனால், முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தொடர்ந்து குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் தனுஷின் உண்மையான பெற்றோர் தாங்கள் தான் என வழக்கு தொடர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவை அறிந்தபின் தன் மகனை மருமகளுடன் சேர்த்து வைக்கச் சொல்லி நடிகர் ரஜினிகாந்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கதிரேசன் - மீனாட்சி தம்பதியின் வழக்கு பல மாதங்களாக விசாரணையில் இருந்தது. பின் கடந்த 2018-ஆம் ஆண்டு நீதிபதி அந்த வழக்கைத் தள்ளுபடி செய்தார்.
மேலும், இந்தப் பெற்றோர் விவகாரம் குறித்து முன்பு நடிகர் தனுஷிடம் கேட்டபோது அது மன உளைச்சலை ஏற்படுத்திய ஒரு நிகழ்வு என அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.