திருமணத்துக்கு பிறகு விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் செய்தியாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் 9 ஆம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. விழாவில் ஷாருக்கான், ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டு இருவரையும் வாழ்த்தினர்.
திருமணத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் சென்றனர். அப்பொழுது கோவில் வளாகத்தில் இருவரும் காலணி அணிந்திருந்ததாக சர்ச்சை உருவானது. இதனையடுத்து திருப்பதி தேவஸ்தானத்திற்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் மன்னிப்புக் கடிதம் அளித்தார்.
இதையும் படிக்க | இன்ஸ்டாகிராமில் ஆபாச கருத்து: நடிகை ரம்யா காவல்துறையிடம் புகார்
இந்த நிலையில் சென்னையில் உள்ள தனியார் விடுதியில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பேசிய நயன்தாரா, இதுவரை எங்களுக்கு நீங்க கொடுத்த ஆதரவுக்கு நன்றி. இப்போ எங்களுக்கு கல்யாணம் நடந்துவிட்டது. இனிமேலும் நீங்கள் எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றார்.
அதன் பிறகு பேசிய விக்னேஷ் சிவன், இந்த விடுதியில் நான் நயன்தாராவை கதை சொல்வதற்காக முதன்முதலில் சந்தித்தேன். இதே விடுதியில் உங்களை சந்திப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறினார்.