திருப்பதி கோவிலில் நடந்த விதிமீறலுக்காக இயக்குநர் விக்னேஷ் சிவன் மன்னிப்பு கோரினார்.
விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் திருமணம் கடந்த ஜூன் 9 ஆம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இருவரது திருமணத்துக்கும் இந்திய அளவில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.
திருமணத்துக்கு பிறகு நேற்று (ஜுன் 10) விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்தனர். அப்போது சாமி தரிசனம் முடிந்தபிறகு கோவில் வளாகத்தில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்பொழுது நயன்தாரா காலணி அணிந்திருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக விசாரணை நடத்தி விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் நடந்த தவறுக்காக மன்னிப்புக்கேட்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருப்பதி திருமலை தேவஸ்தானத்துக்கு அவர் எழுதிய கடிதத்தில், திருமணம் முடிந்த பிறகு வீட்டுக்கு கூட செல்லாமல் நேரடியாக திருப்பதி வந்து ஏழுமலையனின் கலயாண உற்சவத்தில் கலந்துகொண்டோம். அதன் பிறகு கோவிலில் இருந்து வெளியே வந்தபோது எங்களை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டனர்.
இதனால் அங்கிருந்து சற்றுநேரம் வெளியேறி பின் மீண்டும் அப்பகுதிக்கு வந்தோம். அப்போது ஏற்பட்ட பரபரப்பில் காலணி அணிந்திருந்ததை கவனிக்கவில்லை என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.