‘திமிரு’ படத்தில் ஈஸ்வரி கதாப்பாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற ஸ்ரீயா ரெட்டி 'சுழல்' இணையத் தொடர் பல சாதனைகளைப் படைக்க காத்திருக்கிறது என கூறியுள்ளார். அவர் இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.
கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ராதாகிருஷ்ணன் பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி நடிப்பில் பிரம்மா, அனுசரண் இயக்கியுள்ள இணையத் தொடர் - சுழல். (Suzhal: The Vortex). தயாரிப்பு - புஷ்கர், காயத்ரி.
சுழல் - 240 நாடுகளில் 30 மொழிகளில் ஜூன் 17 முதல் அமேசான் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எட்டு பகுதிகளாக உள்ள இந்த இணையத் தொடரின் முதல் நான்கு பகுதிகளை பிரம்மாவும் இதர நான்கு பகுதிகளை அணுசரணும் இயக்கியுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படத்தைப் பற்றி ஸ்ரீயா ரெட்டி கூறியதாவது:
புஸ்கர் காயத்ரி அவர்களின் ‘விக்ரம் வேதா’ படம் மிகவும் பிடிக்கும். சுழலும் அதே வகையில் இருக்கும் என நம்புகிறேன். அவர்கள் என்னை தொடர்பு கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன்.
சுழல் - 240 நாடுகளில் 30 மொழிகளில் வெளியாகும் முதல் தமிழ் ஓடிடி இணையத்தொடராகும். இது இன்னும் பல வகைகளில் சாதனைகளை புரியும். இது நாட்டில் யாரும் பார்க்காத, கேள்விப்படாத எல்லைகளைக் கடந்து போகிறது. தொடரின் கதைக்கரு எல்லோராலும் எளிதாக தொடர்பு படுத்திக்கொள்ள முடியும்.
பாகுபலி, ஜெய்பீம் போன்ற படங்கள் அழுத்தமான கதைகளால் பல எல்லைகளை தாண்டியது. சுழலும் அந்த வகையிலான படம். நிலவியல் மொழியியல் எல்லைகளைத் தாண்டி சுழல் செல்லவிருக்கிறது. அமேசான் பெரிய அளவில் இதை கொண்டு செல்கிறது.