நடிகை, தயாரிப்பாளர், சின்னத்திரை நடிகை, கதாசிரியர் என பல்வேறு தளங்களில் வெற்றிகரமாக இயங்கி வருகிறார் குஷ்பு. தற்போது அவர் பாஜகவில் இணைந்து பணியாற்றி வருகிறார். அவரது அரசியல் சார்ந்த சமுக வலைதள பதிவுகள் அடிக்கடி வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் நடிகை குஷ்பு தனது கன்னத்தில் அறை வாங்கிய நிலையில் இருக்கும் படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ''வன்முறை எதிராக நில்லுங்கள். பேசுவதற்கான நேரம், என்னுடன் நில்லுங்கள், மீரா'' என்பது போன்ற ஹேஷ்டேக்குளை தனது பதிவில் குறிப்பிட்டு, விரைவில் என்று மட்டும் தெரிவித்துள்ளார்.
தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் 'மீரா' என்ற தொடரை குஷ்பு, கதை எழுதி, தயாரித்து நடித்து வருகிறார். விரைவில் இந்தத் தொடர் ஒளிபரப்பாகவிருக்கிறது. இந்தத் தொடருக்கான காட்சி ஒன்றில் குஷ்பு அறை வாங்கப்பட்டிருக்கும், அப்போது எடுத்த படத்தை குஷ்பு பகிர்ந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
தற்போது தெலுங்கு நடிகர் கோபிசந்த்தின் 30வது படத்தில் நடிகை குஷ்பு முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார். இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் ஜகபதி பாபுவும் நடிக்கிறார். ஸ்ரீவாஸ் இந்தப் படத்தை இயக்குகிறார்.