ஆஸ்கர் மேடையில் நகைச்சுவை நடிகரை அடித்தவுடன் வில் ஸ்மித்திடம் நிகழ்ச்சியைவிட்டு வெளியேறச் சொன்னோம் என ஆஸ்கர் அகாதெமி விளக்கம் அளித்துள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த மார்ச்-28 நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவில் தனது மனைவி ஜாடா பிங்கெட் ஸ்மித்தைக் கிண்டலடித்த நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கை மேடையில் ஏறி அறைந்தார் வில் ஸ்மித்.
அலோபீசியா பாதிப்பு காரணமாக தலைமுடி கொட்டி வந்ததால் மொட்டை அடித்திருந்தார் ஜாடா. இதுபற்றி பல பேட்டிகளில் அவர் கூறியுள்ளார். ஆனால் ஆஸ்கர் விருது விழா மேடையில், ஜி ஐ ஜேன் படத்தைக் குறிப்பிட்டு (1997-ல் வெளியான படம்) நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கிறிஸ் ராக், ஜாடாவைக் கிண்டலடித்தார். இதைக் கேட்டு கடுப்பான வில் ஸ்மித், மேடையிலேயே கிறிஸ் ராக்கை அறைந்து, இனிமேல் என் மனைவியின் பெயரை நீ கூறக்கூடாது என்று உரத்த குரலில் கூறினார். இதனால் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வில் ஸ்மித்துக்கு வழங்கப்பட்டது.
பின், நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கை தாக்கியதற்காக வில் ஸ்மித் அவரிடம் மன்னிப்புக் கேட்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இந்நிலையில், வில் ஸ்மித்துக்கு எதிராக கண்டனத்தைப் பதிவு செய்ததுடன் விசாரணையை மேற்கொண்டு வரும் ஆஸ்கர் அகாதெமி மேடையில் நகைச்சுவை நடிகரை அடித்தவுடன் வில் ஸ்மித்திடம் நிகழ்ச்சியைவிட்டு வெளியேறச் சொன்னோம்.ஆனால் அவர் அதை மறுத்துவிட்டார்’ என விளக்கம் அளித்துள்ளது.
வில் ஸ்மித் மீதான ஒழுங்கு விசாரணையின் முடிவில் அவருக்கு வழங்கப்பட்ட ஆஸ்கர் விருது திரும்பப் பெற வாய்ப்புள்ளது என பலரும் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள்.