பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் தந்தையும் பழம்பெரும் நடிகருமான கிருஷ்ணா (79) இன்று(செவ்வாய்க்கிழமை) காலை காலமானார். இவர் நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பு, இயக்கம் எனப் பல பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.
வயது மூப்பின் காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் ஓய்வில் இருந்த கிருஷ்ணாவுக்கு, நேற்று(திங்கள்) காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமாத் துறையினர், ரசிகர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், 'நடிகர் கிருஷ்ணாவின் மறைவு தெலுங்குத் திரையுலகிற்கு ஒரு பெரிய இழப்பு. அவருடன் 3 படங்களில் நடித்த நினைவுகள் எப்போதும் போற்றத்தக்கது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
அதுபோல நடிகர் கமல்ஹாசன், 'தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்த கிருஷ்ணா மறைந்துவிட்டார். அவருக்கு என் அஞ்சலி. அன்னை, சகோதரர், தந்தை என அடுத்தடுத்து இழப்புகளைச் சந்தித்து துக்கத்தில் வாடும் தம்பி மகேஷ்பாபுவின் துயரத்தில் பங்கெடுக்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், பல சினிமா பிரபலங்களும் கிருஷ்ணாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.