தொலைக்காட்சித் தொகுப்பாளராக பயணத்தைத் தொடங்கிய நயன்தாரா மாடலிங்,சினிமா என அடுத்தடுத்த கட்டங்களாக நகர்ந்து இன்று லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்தை எட்டி தக்கவைத்தும் வருகிறார்.
“கதைகள் நிறைய வரும், அதுல எனக்குப் பிடிச்ச கதையில் தான் நான் நடிப்பேன். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இல்லாட்டாலும் நல்ல கதைன்னா, நிச்சயம் நயன்தாரா அந்த படத்தில் இருப்பாள்” என நயன் தனது ஆரம்பகால பேட்டி ஒன்றில் பேசியிருப்பார். இன்றுவரை இந்த பார்மூலாவையே அவர் பின்பற்றி வருகிறார்.
நான் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை என இன்று வரை அலட்டிக்கொள்ளாததே அவரின் வெற்றி ரகசியம் என நினைக்கிறேன்.
நயன்தாரா என்றால் ஏன் அனைவருக்கும் பிடிக்கிறது என்று யோசித்தால் அவரது அழகு, க்யூட்னஸ், நடிப்பு என அனைத்தையும் தாண்டி அவரின் அந்த கட்ஸ் பீலிங் (guts feeling)தான்.
எத்தனை பிரச்னைகள், கிசுகிசுகள், காதல் தோல்வி என அனைத்தையும் அசால்ட்டாகத் தாண்டி இன்று வரை தனது நம். 1 நடிகை என்ற பட்டத்தை தக்கவைப்பது எல்லாம் மற்ற நடிகைகளால் நினைத்துக்கூட பார்க்க முடியாதவை.
ஒவ்வொரு படத்துக்கும் அவர் காட்டும் வெரைட்டி ஒரு ரசிகனாக மட்டுமல்லாமல் சினிமா ரசிகனாகவும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பிகில், அண்ணாத்த போன்ற பெரிய ஹீரோ படங்கள், காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற ஜாலியான படங்கள், அறம், ஓ2, மூக்குத்தி அம்மன் என கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் என அனைத்து விதமான படங்களிலும் அனைத்து கதாபாத்திரங்களும் தன்னுடையதென மாற்றிக்கொள்கிறார்.
சினிமாவில் காதல் தோல்வி, ஏமாற்றம் என கடந்து இன்று இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்தே கரம் பிடித்திருக்கிறார். மேலும், இரட்டைக் குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார். இதனால் இந்த ஆண்டு நயனுக்கு கூடுதல் ஸ்பெஷல்தான்!
காத்துவாக்குல ரெண்டு காதல்!
'நானும் ரௌடிதான்' படத்தில்தான் முதல்முதலாக விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் இணைந்தார்கள். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த இந்த முதல் படம் படு ஹிட்டாகியது. இதுவரை பார்த்திராத ஒரு நயனை அந்த படத்தில் பார்க்கலாம். பாடல்களும் செம ஹிட்.
இதையடுத்து இரண்டாவதாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'.
ராம்போ(விஜய் சேதுபதி) ஒரேநேரத்தில் கண்மணி(நயன்தாரா), கதீஜா(சமந்தா) என இருவரையும் காதலிக்கிறார். இருவரையும் காதலிப்பது காதலிகள் இருவருக்கும் தெரியவர பிரச்னை ஆரம்பித்து, கடைசியில் காதலிகள் இருவரும் ஒருவருக்காக மற்றொருவர் என ராம்போவை விட்டு பிரிகின்றனர். ராம்போவுக்கு அடுத்த காதல் அழைப்பு வருவது போல படம் முடிகிறது.
'காதல் ஒருமுறை எல்லாம் வராது! பலமுறை வரும், ஏன் ஒரேநேரத்தில் இருவரிடம்கூட வரும்' என்ற புது கோணத்தில் கண்மணி - ராம்போ - கதீஜா என முக்கோண காதல் கதையை வித்தியாசமாகவும் ஜாலியாகவும் சொல்லியிருப்பார் இயக்குநர்.
இந்த படத்தின்போது நிஜத்தில் நயன்தாரா, விக்னேஷ் சிவனின் காதலி. அதேநேரத்தில் சமந்தாவுக்கும் சரிசமமான ரோல். அதனால் யாரும் எதுவும் சொல்லிவிடக்கூடாது என்று சமந்தாவுக்கு கூடுதல் கவனம் செலுத்தியதாக சொல்லியிருப்பார். நயன்தாராவுக்கு 'நான் பிழை' என்ற மெலடியான பாடலும் சமந்தாவுக்கு 'டிப்பம் டப்பம்' என்ற அதிரடி பாடலையும் எழுதியிருந்தார்.
முதல் படத்தில் நயனை 'தங்கமே' என்று வர்ணித்த விக்னேஷ் சிவன் இந்தப் படத்தில் 'தங்கச் சிலை'யாகவே காட்டியிருப்பார். நிஜத்திலும் அவரை தங்கமாகவே கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டிருக்கிறார் விக்கி!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவி!