வேட்டையாடு விளையாடு 2 படம் குறித்து கமலுக்கு கௌதம் மேனன் அளித்த பதில் ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது.
சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
விழாவில் பேசிய கமல்ஹாசனிடம் வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகம் குறித்து கேட்கப்பட்டது. அப்போது பதிலளித்த கமல்ஹாசன், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே என் சம்மதத்தை இயக்குநர் கௌதம் மேனனிடம் தெரிவித்துவிட்டேன். கதைக்காக நான் காத்திருக்கிறேன் என்று தெரிவித்தார்.
உடனடியாக மேடையேறிய இயக்குநர் கௌதம் மேனன், ஜெயமோகன் தற்போது கதை எழுதிக்கொண்டிருக்கிறார். விரைவில் அது உங்களது கைகளில் வந்தடையும் சார் என விளக்கமளித்தார்.
வேட்டையாடு விளையாடு கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்பொழுது லோகேஷ் விக்ரம் படத்தில் கமலை ரசித்து படமாக்கியது போல, ஒரு ரசிகராக கமலின் மாஸ் காட்சிகளை இயக்குநர் கௌதம் மேனன் வடிவமைத்திருப்பார்.