நடிகர் விஜய்யின் லியோ படத்தை காண கேரளத்தில் ரசிகர்கள் குவிந்து வருவதால் காட்சிகளை அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. விஜய்யுடன் த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இதனால் லியோ படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, தமிழகத்தில் காலை 9 மணிக்குதான் லியோ திரைப்படம் திரையிட வேண்டும் என்றும், 5 காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும் என்றும் தமிழக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இதனால், காலை 4 மணிக்கு ரசிகர்களுக்கான சிறப்புக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கேரளத்தில் லியோ படத்துக்கு ரசிகர்கள் காட்சி திரையிடப்படவுள்ளது. இதனால், தமிழகத்திலிருந்து விஜய் ரசிகர்கள் கேரளத்தில் குவியத் தொடங்கியுள்ளனர்.
கேரளத்தில் லியோ வெளியாகவுள்ள பெரும்பாலான திரையரங்குகளில் டிக்கெட் விற்றுத் தீர்ந்த நிலையில், சிறப்புக் காட்சிகளுக்கும் கூடுதல் திரையரங்குகளில் வெளியிடவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.
அதுமட்டுமின்றி, தமிழக எல்லையில் உள்ள கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களிலும் ரசிகர்களின் கூட்டம் அலைமோதி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.