இயக்குநர் மனோஜ் பீதா இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் உருவான ஏஜெண்ட் கண்ணாயிரம் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.
தெலுங்கில் நவீன் போலிஷெட்டி நடிப்பில் வெளியான வெற்றித் திரைப்படமான ‘ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாசா ஆத்ரேயா’ படத்தின் தமிழ் ரீமேக் ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’.
இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக ரியா சுமன் நடித்துள்ளார். முனீஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, புகழ், சுருதி ஹரிஹரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கோயம்புத்தூரில் வசித்துவரும் கண்ணாயிரம் ஊருக்குள் சிறிய துப்பறிவாளராக(டிடெக்டிவ் ஏஜெண்ட்) வலம் வருகிறார். சொற்ப வருமானத்திற்கு சின்னச் சின்னதாக எதையாவது கண்டுபிடித்துக்கொடுக்கிறார்.
திடீரென எதிர்பாராத சமயத்தில் ரயில் தண்டவாளம் அருகில் உயிரற்ற உடலைக் கண்டதும் அது கொலை செய்யப்பட்டதுதான் என காவல்துறையிடம் கூறுகிறார். ஆனால், காவலர்கள் கண்ணாயிரத்தை கண்டித்து அனுப்புகிறார்கள்.
இதையும் படிக்க: அதர்வாவுக்கு கைகொடுக்குமா ‘பட்டத்து அரசன்’? திரைவிமர்சனம்
மீண்டும் அடுத்தடுத்து சில நாள்கள் இடைவெளியில் ரயில் தண்டவாளங்களுக்கு அருகே சில பிணங்களைக் காண்கிறார். பின், தனியாக துப்பறியத் துவங்கும் கண்ணாயிரம் இறந்தவர்கள் அனைவருக்கும் இடையேயான ஒற்றுமையைக் கண்டறிகிறார்.
இறந்தவர்கள் யார்? எதற்காக அந்த சடலங்கள் ரயில் தண்டவாளத்திற்கு கொண்டு வரப்பட்டன என்பதை கண்ணாயிரம் ஆராய்வது மீதிக்கதை.
ஏஜெண்ட் கண்ணாயிரமாக இந்தப் படத்தில் சந்தானம் தன் பழைய பாணியிலான நடிப்பிலிருந்து கொஞ்சம் விலகியிருக்கிறார். சில காட்சிகளில் அவருக்கே உரித்தான உடல்மொழி நகைச்சுவைகள் கைகொடுத்துள்ளன.
முனிஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, புகழ் ஆகியோரின் நகைச்சுவை காட்சிகள் படத்திற்கு பலமாக அமைந்துள்ளன.
துப்பறியும் பாணி கதை என்றாலே மிகவேகமான சஸ்பென்ஸ் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். ஆனால், இப்படத்தினை நிதானமாக எடுத்திருக்கிறார்கள். முதல்பாதியும் இரண்டாம்பாதியிலும் சில நல்ல காட்சிகள் இருந்தாலும் தொய்வான திரைக்கதை பார்வையாளர்களின் பொறுமையைச் சோதிக்கிறது.
கோவை மாவட்டத்தை பின்னணியாக கொண்டிருப்பதால் வட்டார வழக்குகள் சரியாக கையாளப்பட்டுள்ளன.
யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை பெரிதாக மனதில் நிற்காதது அதிக குளோஸப் காட்சிகள் போன்றவற்றில் இயக்குநர் கூடுதல் கவனம் செலுத்தி வேலை வாங்கியிருக்கலாம். கலை இயக்குநரின் பணி தனியாக தெரிகிறது.
எதிர்பார்ப்பில்லாமல் சென்றால் ’ஒருமுறை’ எஜெண்ட் கண்ணாயிரத்துக்கு கைகொடுத்துவிட்டு வரலாம்!