25 வயதாகும் அலியா பட், கடந்த ஆறாண்டுகளில் 10 படங்களில் நடித்து பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தாலும், தன் தந்தை மகேஷ்பட்டின் சொந்த நிறுவனத்தில் இதுவரை ஒரு படம் கூட நடித்ததில்லை. இவரது முதல் படம் 'ஸ்டுடண்ட் ஆப் தி இயர்' வெற்றி பெற்றவுடன், மகேஷ்பட், இவரிடம் ஆட்டோகிராப் வாங்கியபோது, 'எனக்கு எந்த வகையிலும் உதவி செய்யாததற்கு மிக்க நன்றி அப்பா. என்னால் இந்த உலகத்தில் ஒரு புதிய அவையை உருவாக்க முடியும் என கருதுகிறேன்' என்று கையெழுத்திட்டு தந்ததை மகேஷ்பட் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறாராம்.
பேட்மின்ட்டன் பயிற்சி பெறும் நடிகை!
சாய்னா நேவால் பற்றிய வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் சாய்னாவாக நடிக்க ஒப்பந்தமான ஸ்ரத்தா கபூர், இதற்காக பேட்மின்ட்டன் பயிற்சி பெற்று வந்தார். இதன் படப்பிடிப்பு வேலைகள் ஒத்திவைக்கப்பட்டதால் ஸ்ரத்தா கபூரும் பயிற்சியை நிறுத்திவிட்டு, வேறு படங்களில் நடிக்கச் சென்றுவிட்டார். தற்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப் போவதாக கூறியதால், படத்தில் இடம் பெற்வுள்ள சில முக்கியமான பேட்மின்ட்டன் பந்தயங்களுக்காக முழுவீச்சில் பயிற்சி பெற மீண்டும் ஹைதராபாத் சென்றிருக்கிறார் ஸ்ரத்தா கபூர்.
மெல்போர்ன் திரைப்படவிழாவுக்கு நடிகையர் திலகம்!
ஆஸ்திரேலியா, மெல்போர்ன் நகரத்தில் ஆகஸ்ட் 10- ஆம் தேதி தொடங்கவுள்ள இந்திய திரைப்பட விழாவில் கீர்த்தி சுரேஷ் நடித்த 'நடிகையர் திலகம்' திரையிடப்படவுள்ளது. விழாவில் திரையிடப்படும் படங்களில் சிறந்த படம். சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை என மூன்று பிரிவுகளில் தேர்வு நடக்கவுள்ளதால், மற்ற மொழிப் படங்களில் நடித்துள்ள நடிகைகளுக்குள் பலத்த போட்டி இருந்தாலும், நடிகையர்திலகம் படத்தில் சாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேஷூக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைக்குமென பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
சன்னிலியோனுக்கு எதிர்ப்பு!
இதுவரை சொல்லப்படாத தன்னுடைய வாழ்க்கையை 'கரண்ஜித் கவுர்' என்ற பெயரில் வெப்சீரியலாக தயாரிக்க சன்னிலியோன் ஒப்புதல் அளித்திருந்தார். ஜீ 5 இதை ஒளிப்பரப்ப தயாராக இருந்த நிலையில் இந்தத் தொடர் பெயரில் கவுர் என்ற பெயரை சேர்த்திருப்பதற்கு சிரோமணி குருத்வார் பிரபந்தக் கமிட்டி ஆட்சேபனை தெரிவித்தது. சீக்கிய மத குருமார்கள் உபதேசங்களை கடைபிடிக்காத சன்னி லியோன் 'கவுர்' என்ற பெயரை பயன்படுத்துவது சீக்கியர்களின் மனதை புண்படுத்துவதாகும் என்று கூறப்பட்டதால், வேறு பெயரில் ஒளிப்பரப்ப தீர்மானித்துள்ளனர்.
அம்மா மீது கோபப்பட்ட மகள்!
என்னுடைய பத்தாவது வயதில் என் அம்மா ஸ்ரீதேவி நடித்த, தமிழ் 'மூன்றாம்பிறை'யின் இந்தி ரீமேக் 'சத்மா'வை பார்த்தபோது இரண்டு நாட்கள் அம்மாவிடம் பேசவே இல்லை. ஏனெனில் இறுதி காட்சியில் கமல்ஹாசனை என்அம்மா தெரியாதது போல் ஒதுங்கியது எனக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியது. நன்றாக நினைவில் இருக்கிறது. என் அம்மாவின் மற்ற படங்களை பார்த்தபோது கூட நான் அழுததுண்டு. மீனாகுமாரி மற்றும் மதுபாலாவின் தீவிர ரசிகையான நான், யாராவது அவர்கள் வாழ்க்கையை படமாக்கினால் நடிக்க தயாராக இருக்கிறேன்' என்கிறார் ஜான்வி கபூர்.